அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக்கு அருகே திபெத்தில் பிரம்மபுத்ரா ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய நீர்மின் அணைகட்டை சீனா கட்டமைக்க திட்டமிட்டு வரும் நிலையில், பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு அணைக்கட்டு திட்ட கனவு தகர்ந்து விடலாம் என சீன பொறியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பிரம்மபுத்ரா கிராண்ட் கேன்யன் பகுதியில் அமைய போகும் இந்த அணை, வரலாற்றில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணையாக இருக்கும் என்றும் சீன அதிகாரி தெரிவித்தார். அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள திபெத்தின் மாவட்டம்தான் மடோக் ஆகும். இந்த பெரிய அணை கட்டும் திட்டம் சீனாவின் 14 வது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். கடந்த ஆண்டு மார்ச் மாதம், சீன நாடாளுமன்றம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
உத்தேசிக்கப்பட்டுள்ள அணை திட்டம் நிறைவேற்றப்பட்டால், நிலச்சரிவு காரணமாக அணை பாதிக்கப்படலாம் என பொறியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர், 'பனிப்பாறைகள் உருகி அப்பகுதியின் திட்டத்தை சீர்குலைக்கலாம் என ஹாங்காங்கின் 'சவுத் சீனா மார்னிங் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. 2018 ஆம் ஆண்டில், பனிப்பாறைகள் உருகி ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மில்லின் கவுண்டியில் உள்ள செடோங்பு பேசின் அருகே உள்ள யர்லுங் செங்போ என்ற பிரம்மபுத்ரா ஆற்றின் மேல் நீரோடையை பெரிதும் பாதித்தது. இது 600 மில்லியன் கன மீட்டர் அளவிலான நீர்த்தேக்கத்தை உருவாக்கியது. தற்போது, அதற்கு மேலே ஓடும் நதியில் அணை கட்டப்பட்டால், அணை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும் என பொறியாளர்கள் எச்சரிக்கின்றனர்.













