சிட்டி வங்கி கிளைகள் இந்தியாவில் மூடப்படுகிறது

SOCIAL SHARE
Pin It

அமெரிக்காவின் 3வது பெரிய வங்கியாக திகழும் சிட்டி பேங்க், இந்தியாவில் 35 கிளைகளுடன் சுமார் 19,000 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. நுகர்வோர் வங்கி வணிகத்தில் கிரெடிட் கார்டு, சில்லறை வங்கி சேவை, வீட்டுக் கடன், நிதி மேலாண்மை போன்ற சேவைகளை அளித்து வருகிறது. இந்தியாவில் சிட்டி வங்கிக்கு 12 லட்சம் வங்கி சேவை பெறுவோர், 22 லட்சம் கிரெடிட் கார்டுதாரர்கள் 2.9 மில்லியன் அதாவது சுமார் 29 லட்சம் சில்லறை வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

தற்போது இந்தியாவில் இருந்து சிட்டி வங்கி வெளியேற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் அதன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக சிட்டி இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான அஷு குல்லர் கூறுகையில், “இந்தியாவில் ஆழமாக பதிக்கப்பட்ட நிறுவனம் மற்றும் இன்று அறிவிக்கப்பட்ட எதிர்கால நடவடிக்கைகள் சிட்டி வங்கியின் முழு உலகளாவிய சக்தியையும் எங்கள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதற்கான நமது திறனை வலுப்படுத்துவதுடன், கார்ப்பரேட், வணிக மற்றும் முதலீட்டு வங்கி, கருவூலம் மற்றும் வர்த்தக தீர்வுகள், அத்துடன் சந்தைகள் மற்றும் பத்திர சேவைகள் ஆகியவற்றில் எங்கள் முன்னணி நிலைகளை வலுப்படுத்துகிறது.

எங்கள் உலகளாவிய வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவில் உள்ள 5 சிட்டியின் மையங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். தற்போதைய அறிவிப்பின் மூலம் எந்த ஒரு வாடிக்கையாளரும், ஊழியரும் உடனடியாக பாதிப்பை சந்திக்கமாட்டார்கள். இடைக்காலத்தில்,   எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம்” என கூறியுள்ளார்.

அமெரிக்காவை தவிர்த்து பிற சந்தைகளில் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ள சிட்டிகுரூப் குழுமம் சிங்கப்பூர், லண்டன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங்காங் ஆகிய 4 சந்தைகளில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது. எனவே இந்தியா , சீனா, மலேசியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இந்தோனேசியா, போலந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், கொரியா , தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய 13 நாடுகளில் வங்கி சேவைகளை நிறுத்தப்போவதாக சிட்டி பேங்க் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த வெளியேறும் நடவடிக்கை எப்போது நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

ARUNACHALAM