செய்யாத குற்றத்திற்கு 31 ஆண்டு சிறைதண்டனை - இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தந்த வழக்கறிஞர்!

SOCIAL SHARE
Pin It

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக 31 ஆண்டுகள் சகோதரர்கள் இருவர் சிறையில் கழித்தனர்.

தென் அமெரிக்க மாநிலமான வட கரோலினாவில் நடைபெற்ற சம்பவம் இது.  ஆனால் உண்மை வெளியானவுடன் செய்யாத குற்றத்துக்காக 31 வருட தண்டனை அனுபவித்தவரின் வழக்கறிஞர் சும்மா இருக்கவில்லை. 

தவறிழைக்காத சகோதரர்கள் இருவருக்கும் 84 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை வாங்கிக் கொடுத்திருக்கிறார். 

1983 ஆம் ஆண்டில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், ஹென்றி லீ மெக்கோலம் (Henry Lee McCollum) மற்றும் அவரது ஒன்றுவிட்ட  சகோதரர், லியோன் பிரவுன் (Leon Brown) இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால், சகோதரர்கள் இருவரின் ஐ.க்யூ மிகவும் குறைவு, அதாவது அவர்கள் திட்டமிட்டோ அல்லது அறிவார்ந்தோ செயல்பட முடியாதவர்கள்  (intellectually disabled).

குற்றம் சாட்டப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை நடைபெற்று இருவரும் கைது செய்யப்பட்ட போது ஹென்றியின் வயது 19, பிரவுனின் வயது15. இருவரும் ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மற்றொரு மனிதன் இருந்ததாக டி.என்.ஏ ஆதாரங்கள் (DNA evidence) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 2014 ஆம் ஆண்டில் இந்த சகோதரர்களின் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன.

அதன் பிறகு மெக்கோலம் மற்றும் பிரவுன் சிவில் உரிமைகள் வழக்கைத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நடுவர் அவர்களுக்கு இழப்பீடு, சேதங்கள் மற்றும் வட்டி என மொத்தம் 84 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையை வழங்கி தீர்ப்பளித்தார்.  

வழக்கில் வெற்றிப் பெற்றதில் சகோதரர்கள் இருவருக்கும் மகிழ்ச்சி. தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை உறுதி செய்த நடுவர் மன்றத் தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

ARUNACHALAM