தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
சென்னையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது எனத் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்று முதல் மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய இ-பதிவு (E-Registration) முறை கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இ-பதிவு முறையும், கடந்த வருடம் நடைமுறையிலிருந்த இ-பாஸ் (E-Pass) முறையும் முற்றிலும் வெவ்வேறு ஆகும். அதாவது இ-பாஸ் முறை ஆனது எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு செல்கிறோம், எதற்காக செல்கிறோம் போன்ற விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்பு நீங்கள் பதிவு செய்த விண்ணப்பத்தை அதிகாரிகள் சரிபார்த்து நாம் குறிப்பிடும் காரணம் அத்தியாவசிய காரணமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவார்கள், ஒருவேளை தேவையற்ற காரணங்களாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும்.
இ-பதிவு முறை ஆனது முற்றிலும் வேறுபட்டது. அதாவது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கு உள்ளேயோ செல்ல வேண்டும் என்றால் https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்த பின்பு அந்த நகலைஎடுத்துக்கொண்டு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த தடையுமின்றி செல்லலாம் என்று கூறப்படுகிறது. அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பயணம் செய்வோருக்கு தொற்று எற்பட்டால் அவர்களை உடனடியாக டிராக் செய்ய இந்த இ-பதிவு முறை உதவும் என்று கூறப்படுகிறது.
எனவே அத்தியாவசிய பணிகாளன மருத்துவ சிகிச்சை, இறப்பு, திருமணம், முதியோர்களுக்கான தேவை, நேர்காணல் போன்ற சில தேவைகளுக்கு இ-பதிவு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பதிவை https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.













