பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவர். 'அவியல்' படத்தை தொடர்ந்து தற்போது சசிகுமார் நடிப்பில் வெளியாக இருக்கும் 'எம்.ஜி.ஆர். மகன்' திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். நாட்டுப்புற பாடல்கள், சினிமா, தேர்தல் பிரசார பாடல்கள் என பலவற்றை பாடியுள்ளார்.
ஸ்டாலின்தான் வர்ராரு... விடியல் தரப்போறாரு பாடல் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார் அந்தோனிதாசன்.
அரசியல் தொடர்பான பாடல்கள் பாடக்கூடாது, அப்படிங்கற முடிவுல இருந்தேன். ஆனா, எனக்கு திரைத்துறையில பல வாய்ப்புகள் கொடுத்த மதன் கார்க்கி கேட்டபோது மறுக்க முடியலை. இதுமட்டுமில்லாம, திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சி காலத்துல நடந்த 'சென்னை சங்கமம்' மாதிரியான நிகழ்ச்சி மூலமா என்னை மாதிரியான பல நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் வெளிய தெரிஞ்சாங்க. எங்களுடைய வாழ்வாதாரமும் மேம்பட்டது. அதனால, இந்த வாய்ப்பு கிடைச்ச போது என்னுடைய நன்றிக்கடன் திருப்பி செலுத்தற விதமாதான் இந்த தேர்தல் பிரச்சார பாட்டை பாடினேன். தேர்தல் முடிவுகளுக்கு முன்னாடி ஸ்டாலின் அய்யாவை மரியாதை நிமித்தமா சந்திச்ச போது, இந்த பாடலை பாடினதை பத்தி சொன்னேன். 'நீங்கதானா அது? அருமையா பாடியிருக்கீங்க'ன்னு சொன்னார். என்னுடைய சினிமா பாடல்கள் போலவே இந்த பாட்டும் ஹிட்டாகி பலர்கிட்டையும் கொண்டு போய் சேர்த்ததுக்கு இந்த வாய்ப்பு கொடுத்த மதன் கார்க்கிக்கும் இந்த பாட்டுடைய இசையமைப்பாளர் ஜெரால்டுக்கும் நன்றி" என்கிறார் அந்தோனிதாசன்.
"சினிமா பாடல்கள் ஹிட் அப்படின்னா ஒரே நேரத்துல உலகம் முழுக்க பலர்கிட்டயும் போய் சேரும். ஆனா, நாட்டுப்புற பாடல்கள் அப்படி இல்ல. அந்த ஊர் மக்கள் கிட்ட மட்டும்தான் போய் சேரும். என்னை மாதிரியான பல நாட்டுப்புற கலைஞர்கள் இப்போ சினிமாக்குள்ள வரது நாட்டுப்புற பாடல்களை இன்னும் அதிக மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கறதுக்கான ஒரு பெரிய தளமா இருக்கு. இப்போ சமூகவலைதளங்களோட வளர்ச்சி நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு இருக்கு. அப்படி இருக்கும் போது சினிமால கதைக்கு தேவையானதை பாடறதுங்கறதை தாண்டி, சமூக வலைதளங்கள் மூலமா தனியிசையையும், நாட்டுப்புற பாடல்களையும் கொண்டு போய் மக்கள் கிட்ட சேர்க்கறது இன்னும் எளிமையாகி இருக்கு. இதுக்கான வரவேற்பும் மக்கள்கிட்ட நல்லாவே இருக்கு".
"நம்ம பண்பாடு, வாழ்வியல் இதெல்லாம் சொல்ல இங்க நாட்டுப்புற கலை அவசியமானதா இருக்கு. என்னைய கேட்டா, இசையோட சேர்த்து பஞ்ச பூதங்கள் ஆறுன்னும், உலக அதிசயங்கள் எட்டுன்னும் சொல்லுவேன். அந்த அளவுக்கு இசை அப்படிங்கறது எல்லாருக்குமே சந்தோஷம் தரக்கூடிய ஒரு விஷயம். முன்னாடி எல்லாம் இந்த கலையை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கறதுக்கு ஊர் ஊரா கச்சேரிகள் நடத்துவோம். இப்போ இந்த ஆன்லைன் காலத்துல அது ரொம்பவே சுலபமாகிடுச்சு. நிறைய புது கலைஞர்களும் வராங்க. மக்களுக்கும் அவங்களுடைய இசை பிடிக்குது அப்படிங்கற போது அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகளும் வந்துட்டுதான் இருக்குது" என்கிறாரர் அந்தோனிதாசன்.













