ஓர் உணவுப்பொருளுக்கு மவுசு அதிகமாக இருந்தால் அதை வைத்து எக்கச்சக்கமாக சம்பாதித்துவிட வேண்டும் என ஒரு கூட்டம் நினைக்குமில்லையா? அதற்கு மீன்களும் தப்பவில்லை. விளைவு, சமீப காலமாக மீன் விற்பனையில் பல்வேறு ஏமாற்று வேலைகள் நடைபெற ஆரம்பித்திருக்கின்றன.
ஃபார்மலின் ரசாயனத்தை மீன்கள் மீது பூசி வைத்தால், மீன்கள் கெட்டுப்போய் பல நாள்கள் ஆகியிருந்தாலும் துர்நாற்றம் வீசாது. ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களைச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், ஒவ்வாமை, வாந்தி, தலைச்சுற்றல், சரும நோய்கள் போன்ற பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்படும். ஃபார்மலின் பூசப்பட்டது மட்டுமல்ல பல நாள்கள் ஐஸில் வைத்து விற்பனையாகும் மீன்களைச் சமைத்து சாப்பிட்டாலும் பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும். முக்கியமாக, தொடர்ந்து ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களை உண்டுவந்தால் புற்றுநோய் வருவதற்கான அபாயமும் அதிகரிக்கும்.
கடல் மீன்களுக்கு மட்டுமல்ல, ஆறு மற்றும் குளங்களில் பிடித்த மீன்களையும் மேற்கூறிய வகைகளில் பரிசோதித்துப் பார்த்தே வாங்க வேண்டும். குளத்து மீன்களை ஐஸ்கட்டியில் வைத்தால் சுருங்கிவிடும். ஆகையால் குளத்து மீன்களை ஐஸில் வைத்து உண்ணக் கூடாது. தவிர, அவை இறந்துவிட்டாலும் உண்ணக் கூடாது. உயிருடன் பிடித்தே, சமைத்து உண்ண வேண்டும்.
அப்படியென்றால் மீன்களையே சாப்பிடக்கூடாதா என யோசிக்க வேண்டாம். கெட்டுப் போகாத மீன்களைத் தேர்வுசெய்து சாப்பிடலாம். கெட்டுப்போன மீன்களை எப்படிக் கண்டறிந்து வாங்குவது?
அதிகபட்சம் இரண்டு நாள்கள்வரை ஐஸில் வைத்த மீன்களைச் சாப்பிட்டால் எந்தப் பிரச்னையும் வராது. அதைத் தாண்டும்போதுதான் ரசாயனங்கள் பூசப்பட்டு அவை விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
மீன் ஃபிரெஷ்ஷாக இருக்கிறதா என்பதைப் பெரும்பாலும் செவுள்களை நிமிர்த்திப்பார்த்துதான் தீர்மானிக்கப்படும். செவுள்கள் ரத்தநிறத்தில் இல்லாமல் வெளிர் நிறத்தில் இருந்தால் அது கெட்டுப்போன மீன் என்பதை உறுதிசெய்துவிடலாம். அதே நேரம், ரசாயனங்கள் பூசப்பட்ட மீன்களில் செவுள்களும் ரத்த நிறத்தில்தான் இருக்கும், செவுளைப் பிளந்து அந்த இடத்தை தொட்டுப் பார்த்தால் கைகளில் பிசினைப் போலவும் ஒரு கூழ்மப் பொருளைத் தொடுவதுபோலவும் உணரமுடிந்தால் மட்டுமே அது ஃபிரெஷ் மீன்.
அதேபோல மீன்களை வாங்கும்போது மீனின் சதைப்பகுதியை கை விரல்களால் அழுத்திப்பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது மீன் விரைப்பாக, தடிமனாக இருக்க வேண்டும். தொளதொளவென இருக்குமேயானால் அது கெட்டுப்போன மீன்.
மீனின் தலைப்பகுதியைக் கைகளால் தூக்கிப் பார்த்தால், மீனின் வால்பகுதி கீழே தொய்ந்து தொங்கிய நிலையில் இருந்தால், அது கெட்டுப்போன மீன். கெடாத மீனாக இருந்தால் மீனின் தலைப்பகுதியைத் தூக்கும்போது வால் பகுதி விரைப்பாகத் தெரியும்.
ஃபார்மலின் ரசாயனம் பூசப்பட்ட மீன்களில் இருந்து மருந்து வாடை வீசும். அதை வைத்தே அது ரசாயனம் கலக்கப்பட்டது எனக் கண்டுபிடித்து விட முடியும்.
மீனின் கண்கள் பளபளப்பாக இருக்க வேண்டும். ரத்த நிறத்திலோ, மங்கிய வெளிர் நிறத்திலோ கண்கள் இருக்குமேயானால் அது நெடுநாள் ஐஸில் வைக்கப்பட்ட மீனாகத்தான் இருக்கும்.
கடல் மீன்களுக்கு மட்டுமல்ல, ஆறு மற்றும் குளங்களில் பிடித்த மீன்களையும் மேற்கூறிய வகைகளில் பரிசோதித்துப் பார்த்தே வாங்க வேண்டும். குளத்து மீன்களை ஐஸ்கட்டியில் வைத்தால் சுருங்கிவிடும். ஆகையால் குளத்து மீன்களை ஐஸில் வைத்து உண்ணக் கூடாது. தவிர, அவை இறந்துவிட்டாலும் உண்ணக் கூடாது. உயிருடன் பிடித்தே, சமைத்து உண்ண வேண்டும்.
ஒருவேளை கெட்டுப்போன மீன் என்று தெரியாமல் சமைத்து வைத்துவிட்டாலும், அதை உண்ணும்போதே தெரிந்துவிடும். அதனுடைய சதைப்பகுதி மாவுபோல இருக்கும். இதைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
மீன்களை வாங்கிய பிறகு, சமைப்பதற்கு சில மணி நேரம் ஆகும் என்றால், சுத்தம் செய்யப்பட்ட மீன்களை புளிக்கரைசலில் அல்லது எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் ஊறவைத்தால் சமைக்கும்வரையிலும் கெடாமல் இருக்கும்.
மீன்களைச் சுத்தம் செய்ததும் உப்பு, மஞ்சள் தூள் போட்டு மூன்று முறை அலசினால், ஒருவேளை ரசாயனங்கள் பூசப்பட்டிருந்தாலும் அவற்றால் ஏற்படுகிற விளைவுகள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வெயில் காலங்களில் மீன்கள் வெகு சீக்கிரமே கெட்டுவிடும். அதனால், அந்த நேரத்தில் மீன்கள் வாங்கும்போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். முடிந்தால் அதிகமான வெயில் இருக்கும் நாள்களில் மீன் உணவைத் தவிர்க்கக்கூடச் செய்யலாம்.''













