உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் COVID-19 தொற்றுநோயின் நதி மூலம், ரிஷி மூலத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் 90 நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அந்த அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தேவைப்பட்டால், சீனாவிடன் சில கேள்விகளை முன் வைப்பது குறித்தும், விசாரணை குழுவிடம் கூறியுள்ளார்.
"கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை ஆராயும் முயற்சியில் எங்கள் தேசிய ஆய்வகங்கள் மற்றும் எங்கள் அரசாங்கத்தின் பிற ஏஜென்சிகள், உளவுத்துறையினர், இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளேன். இது தொடர்பான பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முழுமையாக தெரிவிக்கும்படி நான் புலனாய்வு பிரிவிடம் கூறியுள்ளேன், ”என்றார் ஜோ படைன்.
முழுமையான, வெளிப்படையான, சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச விசாரணையில் பங்கேற்கவும், கொரோனா தொடர்புடைய அனைத்து தரவு மற்றும் ஆதாரங்களை வழங்கவும் சீனாவிற்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா, ஒத்த எண்ணம் கொண்ட உலகின் நட்பு நாடுகளுடன் தொடர்ந்து செயல்படும் என்றும் ஜோ பைடன் கூறினார்.
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து தான் பரப்பப்பட்டது என உலக நாடுகள் பல குற்றசாட்டுகளை வைத்து வரும் நிலையில், இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் மற்றும் முக்கிய தகவல்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இது சீனாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.













