கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாஸ்க் இல்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. சிறிய ரோட்டுக் கடைகள்முதல் பெரிய அங்காடிகள்வரை மாஸ்க் விற்பனை களைகட்டியது.
துவக்கத்தில் என் 95 மாஸ்க் அணிவது நல்லது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது விதவிதமான டிசைனர் துணிகள் கொண்டு மாஸ்க்குகள் தயாராகின்றன. ஆண்கள், பெண்கள் ஆகியோர் தங்கள் அணியும் ஆடைகளுக்கு ஏற்ப கலர்கலரான மார்க்குகளை அணியத் துவங்கி விட்டனர். இவ்வாறாக இந்தியர்களின் அன்றாட உடைகளில் ஒன்றாகவே மாஸ்க்குகள் மாறிப்போயின.
இந்நிலையில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மாஸ்க் அணிவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாஸ்க் விற்பனையாளர்களுக்கு தரக்கட்டுப்பாடு வேண்டும் எனவும் குறிப்பிட்ட தரத்தில் மட்டுமே டில்லியில் மாஸ்க்குகள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இந்த பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
ஃபேன்சிக்காக தயாரிக்கப்படும் கலர்கலரான மாஸ்குகளில் போதிய பாதுகாப்பு இல்லை என மனுதாரர் நீதிபதிகளிடம் குற்றம்சாட்டினார். இவ்வாறு பாதுகாப்பு இல்லாத மாஸ்க்குகளை அணிவதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் யாரேனும் இருக்கின்றனரா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அவரது கருத்தை கேட்டறிந்த நீதிபதிகள் இதுகுறித்து டில்லி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.













