இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல் ஆகியோர் இந்த ஆண்டு அரச குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைய உள்ளனர் என்று Sunday Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஜூன் 12ஆம் நாளன்று லண்டனில் ராணியின் வருடாந்திர பிறந்தநாளன்று நடைபெறும் அணிவகுப்பில் ஹாரி தம்பதிகள் கலந்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
ராணியின் 95 வது பிறந்தநாளையொட்டி Trooping of the Colour என்று அழைக்கப்படும் ராணுவ அணிவகுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் தாக்கத்திற்கு பிறகு ஐக்கிய இராஜ்ஜியத்தின் முதல் தேசிய கொண்டாட்டமாகவும் இந்த அணிவகுப்பு நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்த நிகழ்ச்சியில் அரசக் குடும்பத்தினர் யாரும் கலந்துக் கொள்ளவில்லை. தனியாக இந்த அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார் ராணி எலிசபெத்.
தற்போதைய திட்டத்தின்படி, எலிசபெத் ராணியின் பிறந்தநாள் அணிவகுப்பு லண்டனில் இயல்பாக நடைபெற வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள கொரோனா வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஹாரிக்கு அரச குடும்பத்தினருடனான உறவு சீராக உள்ளது என்று கூறப்படுகிறது. பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், 2021 ஆம் ஆண்டில் ராணியின் 95வது பிறந்தநாள் என்ற மெகா நிகழ்வில் மீண்டும் அரசக் குடும்பத்தினருடன் இணைவார்கள்.













