கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று நோய் கண்டறியப்பட்டது. அதன் பிறகு அது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது.
இந்த நோய் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு ஊரடங்கிற்குள் சென்றன. தற்போது பல நாடுகள் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்தாலும், சில நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் குறையாமல் இருந்து வருகிறது.
இதற்கிடையில் கொரோனாவிற்கு எதிராக பல மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள், தற்போது பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆங்காங்கே சில செய்திகள் வந்தாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என மருத்துவ நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்.
அனைவரும் பயமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடுப்பூசிகளின் பயன்பாட்டால் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என மைக்ரோசாப்ட் துணை நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
“கொரோனா பேரிடர் என்பது ஒரு நம்பமுடியாத சோகம்” என்று குறிப்பிட்டுள்ள அவர், தடுப்பூசி பயன்பாட்டால் 2022 இறுதிக்குள் உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்” என்று கூறியுள்ளார். உலகம் ஒரு மிகப்பெரிய தொற்று நோய் அபாயத்திற்கு உள்ளாக வாய்ப்பிருப்பதாக பில்கேட்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.













