உணவு மற்றும் பானங்களில் சுவைக்காக மக்கள் சேர்த்து கொள்ளும் அதிகப்படியான உப்பு, அவர்களுக்கு ஆபத்தான இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிட்டுள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் தாங்கள் பரிந்துரைத்த 5 கிராம் தினசரி உப்பு உட்கொள்ளல் அளவை மீறி இரட்டிப்பாக சேர்த்து கொள்வதாகவும், இதனால் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் மக்கள் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாகவும் WHO கூறி உள்ளது.
சரியான உணவு கட்டுப்பாடுகள் இல்லாததால் ஆண்டுக்கு 1 கோடியே 10 லட்சம் பேர் உயிரிழப்பதில், குறிப்பாக உணவுகளில் அதிக சோடியம் குளோரைடு சேர்த்து கொள்ளும் விளைவுகளால் ஏற்படும் 30 லட்சம் மக்களின் இறப்புகளும் அடக்கம் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்பின் அளவு பரிந்துரைக்கப்பட்டதை விட அதிகமாக உடலில் சேரும் போது, உயர் ரத்த அழுத்தம், அதனை தொடர்ந்து இதய நோய் உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வழியேற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் உணவுகளில் உப்பு சேர்த்து கொள்வதை குறைப்பதற்கான கொள்கைகளை நாடுகளின் அதிகாரிகள் வகுக்க வேண்டும். தவிர உடலுக்கு ஆரோக்கியம் தரும் சரியான உணவுகளை தேர்வு செய்ய தேவையான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
"பதப்படுத்தப்பட்ட உணவில் சோடியம் சேர்க்கப்படும் அளவைக் குறைக்க தகுந்த நடவடிக்கை தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். உணவில் உப்பு சேர்த்து கொள்வதை கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களை WHO வெளியிட்டுள்ளது.
அதன்படி 64 உணவு மற்றும் நொறுக்கு தீனிகளில் உப்பு எவ்வளவு இருக்கலாம் என்ற அளவை நிர்ணயித்து, சுமார் 194 உறுப்பு நாடுகளுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் அனுப்பியுள்ளது. இந்த வரையறைகளின் படி. உதாரணமாக 100 கிராம் உருளை கிழங்கு சிப்ஸில் அதிகபட்சம் 500 மில்லி கிராம் உப்பு சேர்க்கலாம். பைஸ் மற்றும் பேஸ்ட்ரிகளில்120 மி.கி வரை மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் 360 மி.கி வரை உப்பை சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான சோடியம் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் உயர்ந்து, இதன் விளைவாக இதய நோய்களின் அபாயம் அதிகமாகிறது. உலகளவில் தொற்று நோய்கள் தவிர, அதிக இறப்புகளை ஏற்படுத்துவதாக இதய நோய்கள் உள்ளன. அதிக சோடியம் உட்கொள்வது உடல் பருமன், நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் இரைப்பை புற்றுநோயுடன் தொடர்புடையது என்றும் WHO தெரிவித்துள்ளது. எனவே அபாயங்களை தவிர்க்க அனைவரும் சராசரியாக நாளொன்றுக்கு 5 மில்லி கிராமுக்கு குறைவான உப்பை உணவில் சேர்த்து கொள்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.













