நமது உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்போது பூஞ்சைகள் நம்மைத் தாக்குகின்றன. வேறு நோய்க்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உடலுக்குக் குறைகிறது. அந்த நேரத்தில் பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறது என ஐசிஎம்ஆர் அமைப்பு தெரிவிக்கிறது.
காற்றில் உள்ள பூஞ்சைத் துகள்களை எதிர்ப்பு ஆற்றல் குறைந்த மனிதர்கள் சுவாசிக்கும்போது அவை உடலுக்குள் புகுந்து சைனஸ்கள் மற்றும் நுரையீரலைப் பாதிக்கிறது. கவனிக்காமல் விட்டால் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது இந்தப் பாதிப்பு.
தீராத சர்க்கரை நோய், ஸ்டீராய்டுகள் மூலம் ஏற்படும் எதிர்ப்பு ஆற்றல் முடக்கம், தீவிர சிகிச்சைப் பிரிவில் நீண்ட காலம் இருப்பது, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, வோரிகோனோஸோல் சிகிச்சை ஆகியவை மியூகோர்மைகோசிஸ் நோய் ஏற்படுவதற்குக் காரணம் என்று ஐசிஎம்ஆர் கூறுகிறது.
மூக்குப் பகுதியில் ஏற்படும் இந்த நோய், விரைவிலேயே தொண்டை, கண்கள், மூளை எனப் பரவிவிடும். இந்தத் தொற்று மூளையை எட்டும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நோயாக மாறிவிடுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், எதிர்ப்பு ஆற்றல் முடக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு சில அறிகுறிகளைக் கொண்டு மியூகோர்மைசிஸ் நோய் இருக்கலாம்.
மூக்கடைப்பு, மூக்கின் வழியே கறுப்பாகவோ, ரத்தமாகவோ திரவம் வெளியேறுவது, கன்ன எலும்புகளில் வலி ஏற்படுவது போன்றவதை மியூகோர்மைசிஸ் நோய்க்கான முதன்மையான அறிகுறிகள் என ஐசிஎம்ஆர் பட்டியலிடுகிறது. முகத்தின் ஒரு பகுதியில் வலி ஏற்படுவது, உணர்வின்மை, வீக்கமோ போன்றவையும் இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு மூக்கிற்கும் மேல்வாய்க்கும் இடைப்பட்ட பகுதி கறுப்பாக மாறும்.
பல் வலி, காட்சிகள் மங்கலாகவும் இரட்டையாகவும் தெரிவது, காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை தவிர மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவையும் மியூகோர்மைசிஸ் அறிகுறிகளாகும்.
மியூகோர்மைசிஸ் இருப்பது கண்டறியப்பட்டால் நிச்சயமாக மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது. எந்தச் சிகிச்சையும் எடுக்கக்கூடாது. மியூகோர்மைசிஸை கட்டுப்படுத்துவதற்கு முதலில் ஹைபர்கிளைசீமியா எனப்படும் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பைக் குறைக்க வேண்டும் என மருத்துவ சிகிச்சை நடைமுறையைக் கூறியிருக்கிறது.
நீரிழிவு நோய் இருந்தாலோ, கொரோனாவில் இருந்து குணமடைந்திருந்தாலோ ரத்தத்தின் சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். ஸ்டீராய்டுகளை சரியான நேரத்தில் சரியான அளவு, சரியான காலத்துக்கு மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆன்டிபயாடிக்ஸ், ஆன்டிபங்கல்ஸ் மருந்துகளுக்கும் இது பொருந்தும். ஆக்சிஜன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது சுத்தமான நீரைப் பயன்டுத்த வேண்டும் எனவும் சிகிச்சைக்கான நடைமுறையை ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
கொரோனா தொற்று இல்லாமலும் அதிகமாக மருத்துவமனையில் இருக்க வேண்டிய நோய் உடையவர்களுக்கும், நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குறைப்பதற்கான மருந்துகளை உட்கொள்வோரையும் பூஞ்சை தாக்குகிறது.













