'இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால், அடுத்தடுத்து கொரோனா அலை உருவாக வாய்ப்பு உள்ளது' என, 'பிட்ச் ரேட்டிங்' நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார மதிப்பீடு தர நிர்ணயம் வழங்கும், 'பிட்ச்' ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மே 5-ம் தேதி நிலவரப்படி இந்திய மக்கள் தொகையில் 9.4 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 9-ம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 16.94 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடந்து வருகிறது. தடுப்பூசி பணிகள் மெதுவாக நடந்தால், இந்தியாவில் தற்போதைய 2-வது அலை முடிந்தபின், அடுத்தடுத்து கொரோனா அலைகள் உருவாகும் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது.
இரண்டாவது அலையில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தபோதிலும் முதல் அலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு 2வது அலையில் ஏற்படவில்லை. தற்போதுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தினாலும், பொருளாதார நடவடிக்கையை பாதிக்காத வகையில் அது இருந்து வருகிறது. ஆனால் அதிகமான மாநிலங்களில் நீண்ட கால லாக்டவுனை நடைமுறைப்படுத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும்.
இரண்டாவது அலையில் நிலவும் குறியீடுகளின்படி, நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால், ரிசர்வ் வங்கி நிதி நிறுவனங்களைச் சிக்கலில் இருந்து மீட்க மேலும் பல்வேறு பொருளாதாரச் சலுகைகளை வழங்கலாம் என பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.













