வயிற்றில் சுரக்கும் அமிலத்தை இயற்கை வைத்தியம் மூலம் சரிசெய்வது எப்படி?

SOCIAL SHARE
Pin It

பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அவை இரைப்பையை அரிக்க ஆரம்பித்து, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது. இவ்வாறு வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத் தான் அசிடிட்டி (acidity) என்று சொல்வார்கள்.

இத்தகைய அசிடிட்டி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவை தவிர்ப்பது, வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடியவையே.
 
இத்தகைய அசிடிட்டியை சில அறிகுறிகள் கொண்டு அறியலாம். அவை நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, உணவு உண்ட பின் ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் வயிற்றில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவையை உணர்வது, அடிக்கடி பசி எடுத்தல் போன்றவை. ஆகவே இத்தகைய அறிகுறிகள் இருந்தால், அப்போது உடனே அதனை குணப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவை பெரும் பிரச்சனையை உண்டாக்கிவிடும். அதிலும் அசிடிட்டியை போக்குவதற்கு எங்கும் செல்ல வேண்டாம். அதனை சரிசெய்ய பல இயற்கை வைத்தியங்கள் உள்ளன. 

அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்!

குறிப்பாக உறைப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம்.

பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.

  • தினசரி உணவில் வாழைப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது. அது அமிலசுரப்பு பிரச்சனையை தீர்க்கும்.

  • தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுதான். இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள்.

  • ஒவ்வொரு உணவு இடைவேளைக்கு இடையேயும் நீண்ட இடைவெளி விடுவதும் அமில பிரச்சனைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.

  • ஊறுகாய், கார சட்னி வகைகள், வினிகர் போன்றவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே உசிதம்.

  • புதினா இலையை கொதிக்கும் நீரில் போட்டு, அந்த நீரை உணவுக்கு பின்னர் அருந்தினாலும் நல்ல பலன் கிடைக்கும். கிராம்பு துண்டுகளை வாயில் போட்டு சப்பினாலும் குணம் கிடைக்கும்.

  • வெல்லம், எலுமிச்சை, வாழைப்பழம், பாதாம் பருப்பு, தயிர் ஆகியவையும் உடனடியாக பலன் தரக்கூடியதே. அளவுக்கு அதிகமான புகை பிடிப்பதும் மற்றும் மது அருந்துவதும் அசிடிட்டி பிரச்சனையை அதிகமாக்கிவிடும்.

  • சுவிங்கம் மெல்லுவதும் நல்லது. அதனால் சுரக்கும் அதிகப்படியான உமிழ் நீர் உணவுக் குழாயில் உள்ள உணவை நகர்த்தி சென்று நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கும்.

  • இஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும் என்பதால், அதனை சாறாகவோ அல்லது பவுடராகவோ பயன்படுத்தலாம்.

  • மதிய உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எலுமிச்சை நீரில் சர்க்கரை கலந்து குடிப்பதும் பலனளிக்ககூடியதே.

  • இவையெல்லாவற்றுக்கும் மேலாக முருங்கைக்காய், பீன்ஸ், பூசணி, முட்டைகோஸ், கேரட் மற்றும் பெரிய வெங்காயம் போன்றவற்றை அதிக அளவு எடுத்துக்கொள்வதும் அசிடிட்டி பிரச்சனையை எட்டி பார்க்காமல் செய்துவிடும்.

 

ARUNACHALAM