அமெரிக்காவை சேர்ந்த 22 வயதான, ஜோ டிமியோ (Joe DiMeo),க்கு வாகனம் ஓட்டுவது, குறிப்பாக கார் ஓட்டுவது மிகவும் பிடித்த பொழுது போக்காக இருந்தது.
வாழ்க்கையை திருப்பி போட்ட அந்த சம்பவம் ஜூலை 14, 2018 அன்று நேரிட்டது. தனது இரவு-ஷிப்ட் வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த டிமியோவின் கார் விபத்துக்குள்ளானது. கார் உருண்டு சென்று அவரது உடலில் 80% பகுதியில் தீவிரமான தீக்காயங்கள் ஏற்பட்டது. அவரது முகமும், கைகளும் சிதைந்து போனது.
அமெரிக்காவின் (America) நியூ ஜெர்சியிலுள்ள லிவிங்ஸ்டனில் உள்ள செயிண்ட் பர்னபாஸ் மருத்துவ மையத்தில், தீக்காயங்களுக்கான சிகிச்சை பிரிவில் நான்கு மாதங்கள் செலவிட்டார். அவர் அப்போது கோமா நிலையில் இருந்தார், மேலும் சுமார் 20 முறை ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதிலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இருக்கவில்லை.
பின்னர் டிமியோ 2019 மார்ச்சில் என்.யு.யு லாங்கோன் ஹெல்த் நிறுவனத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவரான டாக்டர் எட்வர்டோ ரோட்ரிகஸ் (Dr Eduardo Rodriguez) என்பவரிடம் சிகிச்சை பெறத் தொடங்கினார் அவர் ஏற்கனவே மூன்று வெற்றிகரமான முக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி, டாக்டர் ரோட்ரிக்ஸ் உடன் 140 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களைக் கொண்ட ஒரு குழு 23 மணி நேர அறுவை சிகிச்சை செய்து, டிமியோவுக்கு ஒரு புதிய முகத்தையும் ஜோடி கைகளையும் கொடுத்தது.
அவர் இன்னும் சிகிச்சையில் இருக்கிறார் என்றாலும், மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார். மருத்துவ உலகில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.













