ஒலியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் சிகிச்சை சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது.
மனது பாரமாக இருக்கும்போது நல்ல இசையைக் கேட்டால் கொஞ்சம் இதமாவதை உணர்ந்திருக்கிறீர்களா?
இயற்கைச் சூழலில் பறவைகள் எழுப்பும் ஒலியும் அருவி நீரின் சத்தமும் ஒருவித உற்சாகத்தைக் கொடுப்பதை அனுபவித்திருக்கிறீர்களா?
ஒலிக்கும் மனநலனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதன் அடிப்படையில்தான் ஒலி சிகிச்சை என்றே ஒன்று பின்பற்றப்படுகிறது. ஒலியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் சிகிச்சை சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது.
``இந்த சவுண்டு தெரபி தியானம் மாதிரி செயல்படுகிறது. இது உங்கள் கிளர்ச்சியுற்ற நரம்புகளை அமைதிப்படுத்தி உணர்வுகளைக் கட்டுப்படுத்துகிறது. உடம்பு வலிக்கு வெதுவெதுப்பான குளியல் எடுத்துக்கொள்வது போல இந்த சவுண்ட் பாத் மன வலிக்கு இதமாக மாறுகிறது. இசைக்கருவிகள், இசை ஊடகங்களைப் பயன்படுத்தி மனதுக்கும் உடலுக்கும் முழுமையான நிம்மதியைத் தர உதவுகிறது. இதில் இசைக் கிண்ணங்கள் மற்றும் கோங் எனப்படும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சவுண்ட் பாத் எனப்படும் ஒலிக் குளியல் மன அழுத்தத்தை அதன் வேரிலிருந்து நீக்க உதவியாக இருக்கும்.
சவுண்ட் பாத் எடுத்துக்கொள்ள எந்த வித விதிகளும் இல்லை. சாதாரணமாக நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ நிதானமாக கண்களை மூடிக்கொண்டு அறையில் வெளிப்படும் ஒலிகள் மற்றும் இசையை காதால் கேட்டு ரசிக்க வேண்டும். சில நேரங்களில் அறையில் இனிமையான ஒலிகளை அறிமுகப்படுத்த ஃபோர்க்ஸ், கோங்ஸ், படிக கிண்ணங்கள் மற்றும் சைம்ஸ் போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சில மருத்துவ சிகிச்சையாளர்கள் தங்கள் சொந்தக் குரலில் இசையை எழுப்பிக்கூட இந்தச் சிகிச்சையை மேற்கொள்கின்றனர்.
இது உடலைப் படிப்படியாகத் தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. இப்படி இசை தியானம் செய்யும்போது தூக்கப் பிரச்னை, நினைவாற்றல் மற்றும் செரிமானத்தைப் பாதிக்கும் பிற தூண்டுதல்களைச் சமநிலைப்படுத்தி, நீண்ட கால நோய்கள் நம்மை ஆட்கொள்ளாமல், மன அழுத்தத்தைப் போக்குகிறது. இதயம் மற்றும் சுவாசத்தின் வேகத்தை நிதானப்படுத்தி உடலில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது.













