சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
தற்போது படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதற்கிடையில் கொரோனாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்திருப்பதால் மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மரபணு மாற்றம் அடைந்த கொரோனா, முன்பிருந்த வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்தனர். இதனால் அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரசுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் பலன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னொரு வகையில் 3-வது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டின் மனஸ் பகுதியில் கண்டறியப்பட்டு இருக்கிறது. அந்நாட்டில் ஏற்கனவே வைரஸ் பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது. தற்போது வைரஸ் மரபணு மாற்றம் அடைந்துள்ளதால் 3-வது அலை தாக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 13,308 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,27,106 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் 621 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 908 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 21.25 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.













