நாசாவின் பர்சிவரன்ஸ் ரோவர் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் செவ்வாய் கிரகத்தின் ஒரு பரந்த பள்ளத்தின் பரப்பில் வெற்றிகரமாக இறங்கியது. மேம்பட்ட வானியல் உயிரியல் ஆய்வகமான இந்த ரோவர் பின்னர் செவ்வாய் கிரகத்தின் படங்களை அனுப்பியது.
வரலாற்று சிறப்புமிக்க பணியில் பங்கெடுத்துள்ள விஞ்ஞானிகளில், இந்திய-அமெரிக்கர் டாக்டர் சுவாதி மோகன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் உயர் கட்டுப்பாடு மேம்படுத்தல் மற்றும் ரோவருக்கான தரையிறங்கும் முறைமைக்கு தலைமை தாங்கினார்.
பர்சிவரன்ஸ் ரோவரின் வியத்தகு தரையிறக்கத்தை உலகம் பார்த்தபோது, கட்டுப்பாட்டு அறையில், அமைதியாக, உணர்ச்சிகளை அடக்கியபடி அமர்ந்திருந்த சுவாது மோகன் ஜி.என் & சி துணை அமைப்புக்கும் திட்டத்தின் மற்ற குழுவினருக்கும் இடையில் தொடர்புகொண்டு ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார்.
இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு சுமார் 20 பயணங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், அவற்றில் பர்சிவரன்ஸுக்கு தனிச்சிறப்பு உண்டு என்றும் நாசா கூறியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பண்டைய நுண்ணுயிர் வாழ்வின் தடயங்களைத் தேடுவதற்காக இந்த பணி தொடங்கப்பட்டது.
இந்த ரோபோ வாகனம் ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு விண்வெளியில் பயணித்தது. செவ்வாய் வளிமண்டலத்தை மணிக்கு 12,000 மைல் (மணிக்கு 19,000 கி.மீ) வேகத்தில் துளைப்பதற்கு முன் 293 மில்லியன் மைல்களை (472 மில்லியன் கி.மீ) இது கடந்து சென்றுள்ளது. அதன் பிறகு கிரகத்தின் மேற்பரப்பில் இறங்குவதற்கான அணுகுமுறையை அது தொடங்கியது.
இதற்கு முன்னர் செவ்வாய் கிரகத்திற்கு சென்ற நான்கு ரோவர்களை விட பர்சிவரன்சில் அதிகமான கருவிகள் ஏற்றப்பட்டுள்ளன. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஏதோ ஒரு காலத்தில், நீர் பாய்ந்தது என்பதையும், கார்பன் மற்றும் பிற தாதுக்கள் நீரால் மாற்றப்பட்டு வாழ்வின் பரிணாம வளர்ச்சிக்கான முன்னோடிகளாக இருந்தன என்பதையும் அடிப்படைக் கொண்டு இது குறித்த அடுத்த கட்ட ஆய்வுகளை பர்சிவரன்ஸ் மேற்கொள்ளும்.
ஒரு வேற்று கிரக சூழலில் இருந்து மனிதர்களுக்கு நேரடி பயன்பாட்டில் பயன்படும் இயற்கை வளத்தை பிரித்தெடுப்பதற்காக முதன்முதலில் உருவாக்கப்பட்ட பெட்டி வடிவ கருவி, செவ்வாய் கிரகத்தில் எதிர்கால மனித வாழ்க்கைக்கான ஆய்விற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.













