வாகனங்களை பதிவு செய்யும்போது அதில் சட்டப்பூர்வமான வாரிசின் பெயரும் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போது வாகன உரிமையாளர் இறந்தால் வாகன பதிவின் போது ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள அவரின் வாரிசின் வாகனத்தை பெயருக்கு மாற்றம் செய்யும் நடைமுறை எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வங்கி கணக்கு, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றை தொடங்கும்போது வாரிசுகளின் பெயர்கள் ஆவணங்களில் பதிவு செய்யப்படும்போது, வாகனங்களை பதிவு செய்யும்போது, ஏன் வாரிசுகளை பதிவு செய்யக்கூடாது?
90 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழ் போன்ற ஆவணங்களை பெறவில்லை என்றால் சட்டப் போராட்டம் நடத்தித்தான் ஆவணங்களை வாங்க முடியும் என்ற நிலை உள்ளது.
வாகனங்களை லோன் மூலம் வாங்கும்போது தவணையை செலுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கியோ, நிதி நிறுவனமோ வாகனங்களை எடுத்துச்சென்று தங்கள் பெயரில் மாற்றம் செய்ய வழி இருக்கும்போது வாகன உரிமையாளர் தனது வாரிசை வாகனப் பதிவின்போது சேர்ப்பதில் என்ன தவறு உள்ளது?
வாகன உரிமையாளர் மரணமடைந்து 90 நாட்கள் வரைதான் வாகனத்தின் இன்சூரன்ஸ் செல்லும். அந்த 90 நாட்களில் இந்த ஆவணங்களைப் பெற வேண்டும். ஆனால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக ஆவணங்களை பெற முடியாது. விபத்து நடந்து 90 நாட்கள் கடந்துவிட்டால் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிடும். இதனால் இன்சூரன்ஸ் பெறுவதில் சிக்கல் ஏற்படும். சான்றுகள் இல்லையென்றால் விபத்தில் பலியாகும் நபர்களின் குடும்பத்தினர் இழப்பீட்டை பெற முடியாது.
வாகன உரிமையாளர் விபத்திலோ அல்லது இயற்கையாகவோ மரணமடைந்துவிட்டால் அவர் பெயரில் பதிவான வாகனத்தின் உரிமையை வாரிசுகளுக்கு மாற்றுவதற்கு வாரிசு சான்றிதழ், வங்கிகளில் இருந்து தடையில்லா சான்று உள்ளிட்ட 9 ஆவணங்கள் தேவைப்படும்.













