பயனாளிகளுக்கு தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு தேவை

SOCIAL SHARE
Pin It

கணினி அல்லது இணையம் தொடர்பான, மின்வெளி தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வும் நமக்கு அவசியம்.

தகவல் தொழில்நுட்பம் என்பது இருமுனையும் கூர்மை கொண்ட ஓர் ஆயுதம். அதை கையாளும்போது சற்று கவனம் சிதறினாலும் நம்மை குத்திக் கிழித்து விடும். கொரோனா காலத்தில் முன்பைக் காட்டிலும் மிக அதிகமாக தகவல் தொழில்நுட்ப சாதனங்களை நாம் கையாளுகிறோம். வேலைக்குச் செல்லவோ பள்ளி, கல்லுாரிகளுக்குச் செல்லவோ வாய்ப்புகள் குறைந்து போன நேரத்தில் பாதுகாப்பு கருதி இன்னமும் வீட்டிலிருந்து சிலர் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

படம் பார்ப்பது முதற்கொண்டு சாப்பாடு தருவிப்பது வரை அன்றாடம் நாம் இணையத்தைப் பயன்படுத்தி வருகிறோம். ஒரு செயலியை நம்முடைய அலைபேசியில் (ஸ்மார்ட்போன்) பதிவிறக்கம் செய்ய அது விதிக்கும் அத்தனை நிபந்தனைகளுக்கும் நாம் அது குறித்த புரிதல் ஏதும் இல்லாமலே ஆமோதித்து ஒப்புதல் வழங்குகிறோம். 'கூகுள்' போன்ற தேடுபொறிகள் இலவசமாகவே எண்ணற்ற தகவல்களை நமக்கு வாரி வழங்குகின்றன.

நம் தேவை என்ன, நம் விருப்பம் எதைச் சார்ந்தது, நாம் அன்றாடம் எவற்றையெல்லாம் கவனிக்கிறோம் என்று தேடுபொறிகள் நம்மைப் பற்றிய தகவல்களை நமக்கே தெரியாமல் திரட்டி வைத்துள்ளன. சொல்லப்போனால், அவை நம்மைப்பற்றி நம்மைவிட அதிகம் தெரிந்து வைத்துள்ளன. சில செயலிகள் நம்முடைய தகவல்களைத் திரட்டி, வர்த்தக ரீதியில் தேவைப்படுவோருக்கு வழங்கி பணம் ஈட்டுகின்றன.

மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தகவல்கள் இப்படி பல்வேறு நிறுவனங்களுக்கு வர்த்தக நோக்கில் பகிரப்படுகின்றன. இவை அனைத்தும் பள்ளிகளில் மட்டுமே பதிந்து வைத்திருந்த அலைபேசி எண்கள். வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு படிக்க விருப்பமா என கேட்டு நாளொன்றுக்கு 30 அழைப்புகள் வந்ததாக என் தோழி கூறினாள்.

நம் நேரத்தை நம்மிடமிருந்து பிடுங்கும் இச்செயல் தகவல் திருட்டால்தான் ஏற்படுகிறது.நிபந்தனைகளுக்கு உட்பட்டே அனைத்து இலவசங்களும் நமக்குக் கிடைக்கின்றன. நம்மைப் பற்றிய தகவல்களைப் பரிமாறும்போது கவனமாக இருந்தால் சில நெருக்கடிகளை நாம் களையலாம். இன்று சிறப்பங்காடிகள் முதற்கொண்டு எங்கு போய் என்ன பொருள் வாங்கினாலும் அலைபேசி எண் கேட்கப்படுகிறது. நாமும் எவ்வித யோசனையுமின்றி போகுமிடமெல்லாம் அனைவரிடமும் எண்ணை பதிந்து கொள்ள அனுமதிக்கிறோம். ஏன், எதற்கு என்று வினவினாலோ தங்களுடைய தள்ளுபடி விற்பனைகளை நமக்கு குறுந்தகவலாக அனுப்பி வைப்பதற்கு என்கிறார்கள்.
 

குடியிருப்புகளில், அலுவலகங்களில் அனைவரும் இணையத்தை பயன்படுத்துவதற்கு வசதியாக சுலபமான ஒரு கடவுச்சொல்லைப் (Password) பதிந்து வைத்திருப்பர். ஆனால், சிலர் இலவச இணையத்திற்காக (Wi-fi), கடவுச்சொல்லைக் கேட்டு பெறுவது இன்று வாடிக்கையாகி விட்டது. நமக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இப்படி சென்று சேரும் தகவல்களால் நம் பாதுகாப்பு குறையும்.நம் கடவுச்சொல்லை பிறர் தவறாக உபயோகிப்பதைத் தடுக்க, அவ்வப்போது அதனை மாற்றுதல் அவசியம். யாரும் ஊகிக்கமுடியாத கடவுச்சொல்லாக பார்த்து நாம் வடிவமைக்க வேண்டும்.

சிலர் குறிப்பிட்ட ஒரு கடவுச்சொல்லை பல வருடங்களாக மாற்றாமல் வைத்திருப்பர். என்ன பெரிதாக நடந்துவிடும் என்ற சிறு அலட்சியப் போக்கு இணையத்தை தவறாக உபயோகிப்போருக்கு சாதகமாக அமைந்துவிடும். ரயில் நிலையங்கள், பேரங்காடிகள், விமான நிலையங்களில் இலவச வைபை வசதியை ஏற்படுத்தி வைத்திருப்பர். அதைப் பயன்படுத்தத் தொடங்குகையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாம் சம்மதம் தெரிவிப்போம்.

இதன் மூலம் நம் அலைபேசி எண் உட்பட தகவல்கள் எல்லாம் அவர்களுக்குச் சென்றுவிடும். அதேபோல் பொது இடங்களில் நம் அலைபேசிக்கு சார்ஜ் செய்ய வேண்டாம். அங்கு சில கருவிகள் ரகசியமாக இணைத்து வைக்கப்பட்டிருந்தால் நம்முடைய முக்கிய தரவுகள் களவாடப்படக் கூடும்.

கூகுள் லைவ் லொகேஷனை பரிமாற்றம் செய்து கொள்வது பிறருடைய இருப்பிடத்தை கண்டு பிடிக்க பேருதவியாகத்தான் இருக்கிறது.ஆனால் அதன் மூலம் நாம் எங்கெங்கெல்லாம் பயணிக்கிறோம் என்னும் தகவல் பிறருக்கு தேவைப்படும் பட்சத்தில் கிடைத்து விடும். இதன் மூலமே குற்றவாளிகள் எளிதில் பிடிபடுகிறார்கள். குற்றச்செயல் புரிபவர்கள் தான் கலங்க வேண்டுமேயன்றி பொதுமக்கள் இதுகுறித்தெல்லாம் பயம் கொள்ளத் தேவையில்லை.

நமக்கு வெளிப்படையாகக் காணக்கிடைக்கும் இணைய செயல்பாடுகள் வெறும் ஐந்து விழுக்காடு மட்டுமே. நாம் உள்நுழைந்து தேடும், செயல் புரியும் அனைத்தும் இதனுள்ளேயே அடங்கும். மீதமிருக்கும் 95 சதவீதம் இருண்ட இணையமாக (டார்க் வெப்) உலகம் முழுக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கென்று எந்த வரைமுறையும் ஒழுங்குமுறையும் கிடையாது. சட்டத்துக்குப் புறம்பான பணப் பரிவர்த்தனைகள், போதைப் பொருள்கள், கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை எல்லாம் இதன் வழியே சக்கைபோடு போடுகின்றன.

ராணுவ ரகசியங்கள் உட்பட பிறருக்கு தெரியக்கூடாது என பாதுகாக்கும் ரகசியங்கள் பெரும்பாலும் டார்க் வெப் மூலமே பரிமாறப்படுகிறது. பல மருத்துவமனைகள், நிறுவனங்கள் தங்கள் விவரங்களை டார்க் வெப் மூலமும் சேமித்தும் வைக்கின்றன.ஒரு வழித்தடத்தில் போவதை இன்னொரு வழித்தடத்தில் பயணிப்பவர்களால் பார்க்க முடியாது. பயணிக்கும் ஆபத்தான காட்டு வழியில் ஆளுக்கு ஒருபுறம் ரகசிய வழியில் செல்வது போன்றது தான் இருண்ட இணையத்தில் பயணிப்பது.

அண்மையில் வாட்ஸ் ஆப் அறிவித்த தனியுரிமைக் கொள்கை பரபரப்பை ஏற்படுத்தியது. தனிப்பட்ட நபர்களுக்குள் பகிர்ந்துகொண்ட தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரக்கூடும் என்ற அச்சம் அந்த நிறுவனத்திற்கு எதிராக எதிர்வினையாற்றியது. புதிதாக ஒரு அலைபேசியை உபயோகிக்க ஆரம்பித்தாலே அது விதிக்கும் அத்தனை நிபந்தனைகளுக்கும் நாம் தெரியாமல் சம்மதம் தெரிவிக்கிறோம்.

தகவல் தொழில்நுட்பம் நம்முன் கடலைப்போல விரிந்து கிடக்கிறது. அதன் ஆழம் தெரிந்து, அலைகளின் வேகம் அறிந்து இறங்க வேண்டும். எப்போதும் கவனத்துடனே பயணிக்க வேண்டும்!

ARUNACHALAM