மின்சார வாகனங்களுக்கு கடன் வழங்க தயங்கும் வங்கிகள்

SOCIAL SHARE
Pin It

வங்கிகள் கடன் வழங்க மறுப்பதால், மின்சார வாகனங்களை விற்பதில் சிரமங்கள் ஏற்படுவதாக, மின் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.

கடனை திருப்பி செலுத்தாதபட்சத்தில், மின்சார வாகனத்தின் எஞ்சிய மதிப்பு, மறுவிற்பனை மதிப்பு ஆகியவற்றை கணக்கிடுவது சிரமம் எனக் கருதி, வங்கிகள் கடன் வழங்க மறுப்பதாகவும் அவை குற்றஞ்சாட்டுகின்றன.

குறிப்பாக, மின்சார ரிக்‌ஷா, சரக்கு வாகனங்கள் போன்றவற்றை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து, இப்பிரச்னை முன்வைக்கப்படுகிறது.

வழக்கமான வாகனங்களுக்கு ஆகும் எரிபொருள் மற்றும் பராமரிப்புகளுக்கான செலவை விட, மின்சார வாகனங்களுக்கு குறைவாக இருப்பது தான்.ஆனால், இந்த வாய்ப்பை, மின்சார வாகன விற்பனையாளர்களால் நன்றாக பயன்படுத்திக் கொள்ள முடிய வில்லை. காரணம், வங்கிகள் கடன் கொடுக்க தயங்குவது தான்.

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள், வாகனத்தை வாங்காமல் சென்றுவிடுகிறார்கள் அல்லது வங்கிகளை விட்டுவிட்டு, கூடுதல் வட்டிக்கு, வேறு இடங்களில் கடன் பெற்று வாகனங்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவில் கிட்டத்தட்ட, 90 சதவீத வாகனங்கள், வங்கி உள்ளிட்டவற்றின் மூலம் கடன் பெற்றே வாங்கப்படுகின்றன. ஆனால், மின்சார வாகனங்களில் நிலை வேறு மாதிரி இருக்கிறது. மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவற்றை வாங்குபவர்கள், எளிதாக, பிணையம் மூலம் கடன் பெற்று விடுகிறார்கள்.

மேலும் கார்கள், இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்களிடம், சொந்தமாக பைனான்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. அதனால், இந்த பிரிவில் பிரச்னைகள் குறைவு. ஆனால், வர்த்தக வாகனங்கள் கதை வேறு. இத்தகைய வாகனங்களை வாங்குபவர்களுக்கு போதுமான வருமானம் இருக்காது; அவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்பது போன்ற எண்ணம் வங்கிகளுக்கு இருக்கிறது.

கடன் வழங்கிய இரண்டு ஆண்டுகளுக்கு பின், வாகனத்தின் நிலை எப்படி இருக்கும், பேட்டரி எப்படி இருக்கும் என்பது குறித்து வங்கிகளால் சரியாக கணிக்க இயலவில்லை.

இதனால் மறு விற்பனை செய்யும் போது, எவ்வளவு தொகைக்கு விற்பனை ஆகும் என்பதையும் அவர்களால் கணிக்க முடியவில்லை. இவை போன்ற காரணங்களால், வங்கிகள் மின்சார வாகனங்களுக்கு கடன் வழங்க தயங்குகின்றன.

ARUNACHALAM