பிபிசி உலக சேவை டி.விக்கு சீனா தடை

SOCIAL SHARE
Pin It

பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதாக வியாழக்கிழமை இரவு அறிவித்திருக்கிறது.

பிரிட்டனில் அதன் ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காம் (Ofcom), சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (சிஜிடிஎன்) என்ற சீன அரசு ஒளிபரப்பு நிறுவனத்தின் ஒளிபரப்பு உரிமம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக, பிபிசி மீதான சீனாவின் உள்நாட்டு ஒளிபரப்பு தடை அமைந்திருக்கிறது.

சிஜிடிஎன் உரிமத்தை ஸ்டார் சீனா மீடியா என்ற நிறுவனம் விதிகளை மீறி பெற்றிருப்பதாக தெரிய வந்ததையடுத்து அதன் ஒளிபரப்புக்கு ஆஃப்காம் இந்த மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது.

மேலும், பிரிட்டன் குடியுரிமை பெற்றவரும் பத்திரிகையாளருமான பீட்டர் ஹம்ப்ரே, சீன சிறையில் இருந்த விவகாரத்தில் அவரது கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதலை ஒளிபரப்பியதாகவும் சிஜிடிஎன் மீது சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், சீனாவில் பிபிசி உலக சேவை தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதித்திருக்கும் சீன அரசின் முடிவு குறித்து அதன் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடர்பான நிர்வாகம், "பிபிசியின் சீனா தொடர்புடைய சில தகவல்கள் - உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பது மற்றும் சீன தேசிய நலன்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற தங்கள் நாட்டு ஒலிபரப்பு வழிகாட்டுதல்களை மீறும் வகையில் உள்ளன," என்று தெரிவித்திருக்கிறது.

இதே வேளை, சீனாவில் பிபிசி உலக சேவை ஒளிபரப்பு செய்ய மேலும் ஓராண்டு அவகாசம் கேட்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அந்த நிர்வாகம் கூறியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சீன அரசுத்துறையின் நடவடிக்கை தொடர்பான முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. சர்வதேச அளவில் உலக செய்திகளை வெளிப்படையாகவும் பக்க சார்பற்றும் அச்சமன்றியும் வெளியிடுவதில் உலகின் நம்பகமான சர்வதேச ஊடக ஒளிபரப்பாளராக பிபிசி உள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிபிசி உலக சேவைக்கு தடை விதித்துள்ள சீன அரசின் நடவடிக்கையை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் விமர்சித்துள்ளார்.

"ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கை ஏற்க முடியாதது," என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்காவும் கண்டித்துள்ளது. சீனாவில் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலான விரிவான பிரசாரத்தின் அங்கமாக அந்நாட்டு அரசின் நடவடிக்கை கருதப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

சீனாவில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படுவது புதியது கிடையாது. அங்கு ஏற்கெனவே 2000ஆம் ஆண்டில் அமெரிக்க ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றியிருக்கிறது. சீனாவில் பிபிசி உலக சேவையின் இன்டர்நெட் மற்றும் அதன் செல்பேசி செயலி ஏற்கெனவே முடக்கப்பட்டிருக்கின்றன.

 

ARUNACHALAM