பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடுவதில் மாடுகளுக்கு பெரும் பங்கு உண்டு. அவை வெளியேற்றும் வாயுக்களில், மீத்தேன் பெருமளவு இருப்பது தான் அதற்குக் காரணம். மாடுகளின் தீவனத்தோடு, சிறிதளவு கடல்பாசியை சேர்த்தால், மாடுகள் வெளியேற்றும் மீத்தேனின் அளவில், 82 சதவீதத்தை குறைக்கலாம் என, 'பிளோஸ் ஒன்' இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.
நம் வளிமண்டலத்திற்குள் வெப்பத்தைத் தேக்கி வைத்து, பூமியை சூடேற்றுவதில், கார்ப்ன் - டை - ஆக்சைடைவிட, மீத்தேனுக்கு அதிக பங்கு உண்டு. மீத்தேனை வெளியேற்றுவதில் விவசாயத்திற்குதான் முதலிடம். என்றாலும், மனிதர்கள் உருவாக்கிய பண்ணைகளில் வளரும் கால்நடைகள், 37 சதவீத பங்கு மீத்தேனை வெளியேற்றுகின்றன.
எனவே தான், இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகளுக்கு, தீவனத்தில் என்ன மாறுதல்களை செய்தால், அவை வெளியேற்றும் மீத்தேன் வாயுவை குறைக்கலாம் என, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் சோதனை செய்தனர். இறுதியில், தீவனத்தோடு, மிகச் சிறிய அளவு கடல்பாசியை கலந்து கொடுத்தால், பெருமளவு மீத்தேன் வெளியேற்றத்தை தடுக்க முடியும் எனத் தெரியவந்தது.













