கால்பந்து பிரபலம் மரடோனாவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அண்மையில் மாரடைப்பால் இவர் உயிரிழந்தார். மரடோனாவிற்கு மரணத்திற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், மரடோனாவுக்காக தமிழ்நாட்டில் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் பேக்கரி ஒன்றில் 60 கிலோ சர்க்கரை மற்றும் 270 முட்டைகளைப் பயன்படுத்தி ஆறு அடி உயர கேக் சிலை உருவாக்கி மரடோனாவுக்கு மரியாதை செலுத்தியிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு பேக்கரி, கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் (Diego Maradona) அளவிலான கேக் சிலையை உருவாக்கி, மறைந்த அர்ஜென்டினா வீரரை கெளரவிக்கும் சாதனை செய்துள்ளது. இந்த சாதனை நான்கு நாட்களில் செய்யப்பட்டுள்ளது.
பேக்கரியின் ஊழியர் சதீஷ் ரங்கநாதன் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம் இந்த சாதனையைப் பற்றி பேசினார். “ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் (christmas) மற்றும் புத்தாண்டு (New Year) கொண்டாட்டங்களின் போது, பிரபலங்களின் கேக் சிலைகளை உருவாக்கி அவற்றை பொதும்க்களின் பார்வைக்கு வைப்போம். கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் இளையராஜா, அப்துல் கலாம், பாரதியார் என பலருக்கு கேக் சிலைகளை வைத்திருக்கிறோம்” என்று பேக்கரி பணியாளர் தெரிவித்தார்.
"கடந்த மாதம் இறந்த கால்பந்து வீரர் மரடோனாவுக்கு மரியாதை செலுத்துவதற்காக மட்டும் இந்த கேக் (Cake) சிலையை நாங்கள் உருவாக்கவில்லை. இளைஞர்கள் தங்கள் மொபைல் போன் மற்றும் கணினியில் விளையாடுவதற்கு பதிலாக களத்தில் இறங்கி உண்மையில் விளையாடுவதை வலியுறுத்துவதற்கும் இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். விளையாடுவதால் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலம் மேம்படும்” என்று பேக்கரி ஊழியர் கூறுகிறார்.
அர்ஜென்டினாவின் ஒரு சிறிய நகரத்தில் பிறந்த மரடோனா தனது முயற்சியால் கால்பந்தில் பிரகாசித்தார் என்பதை சுட்டிக் காட்டும் சதீஷ் ரங்கநாதன், இந்திய வீரர் டெண்டுல்கர் (Tendulkar) கிரிக்கெட்டுக்காகவும், 100 மீட்டர் ஓட்டத்திற்கு உசேன் போல்ட் (Usain Bolt) மற்றும் குத்துச்சண்டைக்கு மைக் டைசன் (Mike Tyson) நினைவுகூரப்பட்டதைப் போலவே மரடோனா கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனாக என்றென்றும் நினைவுகூரப்படுவார் என்றும் பேக்கரியில் பணிபுரியும் சதீஷ் கூறுகிறார்.













