- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 162
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை சுனில் கவாஸ்கர் படைத்த நாள் மார்ச் 7. இவர் 1987-ம் ஆண்டு அகமதாபாத் நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தச் சாதனையை படைத்தார்.
கிரிக்கெட் உலகில் கவாஸ்கர் கால்பதித்த நாட்களில் பந்துவீச்சாளர்களின், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் கையே ஓங்கி இருந்தது. இந்த காலகட்டத்தில் அவர்களை எதிர்த்தும் ரன்களைக் குவிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் சுனில் கவாஸ்கர். சர்வதேச அரங்கில் ‘லிட்டில் மாஸ்டர்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவரது தொடர் சாதனைகள் இந்தியாவுக்கு பெருமையை பெற்றுத் தந்தன.
ஆரம்ப கட்டத்தில் கிரிக்கெட் உலகில் வேகமாக முன்னேறிய கவாஸ்கர், தன் இறுதிக் காலத்தில் கொஞ்சம் தடுமாறத் தொடங்கினார். இதனால் ஒரு கட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விடலாமா என்றுகூட அவர் யோசித்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் உலகில் யாரும் செய்ய முடியாத சாதனையை, 10 ஆயிரம் ரன்களை எட்ட வேண்டும் என்ற லட்சியம் அவரை தொடர்ந்து ஆடவைத்தது.
1987-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி அவரது ஆசை நிறைவேறியது. இப்போட்டியில் அரைசதம் அடித்த கவாஸ்கர், 58 ரன்களை எட்டிய நிலையில், 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். பேட்டைத் தரையில் ஓங்கி அடித்து தனது மகிழ்ச்சியை கவாஸ்கர் வெளிப்படுத்த, பாகிஸ்தான் வீரர்கள் உட்பட மைதானத்தில் இருந்த அனைவரும் கரகோஷத்துடன் அவரை வாழ்த்தினர். 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற பெருமையுடன் அடுத்த சில நாட்களில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார் கவாஸ்கர்.


















