- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 169
சமூக வலைதளங்களில் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்த வேண்டாம் என அவரது உறவினர் மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவுறுத்தல் செய்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் மீனா ஹாரிஸ் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்வீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்னர், பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற மாணவி, கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை ஒரு போராட்ட குழு சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, பெங்களூரு வந்த டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். விசாரணையில், திஷா ரவி பெங்களூருவில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருவதும், பகுதி நேரமாக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தும் வந்துள்ளார். அத்துடன், ‘பிரைடே பார் பியூச்சர்’ என்ற பெயரில் செயல்படும் போராட்ட குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்த இவர், சமூக வலைத்தளம் வாயிலாக பலரிடம் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கிளர்ச்சியை ஏற்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், திஷா ரவி வன்முறையை தூண்டி விடுவதாக டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களில் 2 வரிகளை மட்டுமே திருத்தி, மற்றவர்களுக்கு அனுப்பியதாக நீதிபதியிடம் அழுதபடியே தெரிவித்தார். இதற்கிடையே இதே வழக்கில் திஷா ரவியின் நெருங்கிய தோழியும் வழக்கறிஞருமான நிகிதா ஜேக்கப் என்பவருக்கு எதிராக ஜாமினில் வெளியே வராத பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது


















