- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 180
ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், அதன் லிங்குகள் ஆகியவற்றை தங்களின் தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டத்தை சென்ற மாதம் நிறைவேற்றியது.
இந்த புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் வழங்கும் சேவையை நிறுத்தப் போவதாக அச்சுற்றுத்தல் விடுத்தது . எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியாக இருந்ததை அடுத்து, பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இதை அடுத்து, ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், பேஸ்புக் ஆஸ்திரேலியாவில் செய்திகளை தனது பக்கங்களில் வெளியிடுவதை நிறுத்தி விட்டது.
இந்நிலையில், பேஸ்புக் மற்றும் ஆஸ்திரேலியா இடையே பல முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.
இதன் விளைவாக, தற்போது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான நியூஸ் கார்ப் (News Corp) நிறுவனத்துடன் பேஸ்புக் (Facebook) ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. அமெரிக்க சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியாவின் உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.
"பேஸ்புக் உடனான ஒப்பந்தம் பத்திரிகைக்கான வர்த்தக விதிமுறைகளை மாற்றுவதில் ஒரு மிகப்பெரிய மைல் கல் எனலாம். மேலும் எங்கள் ஆஸ்திரேலிய செய்தி வணிகங்களுக்கான வருமானத்தை மேம்படுத்தி அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்" என்று நியூஸ் கார்ப் தலைமை நிர்வாகி ராபர்ட் தாம்சன் கூறினார்.
தி ஆஸ்திரேலியன் (The Australian), டெய்லி டெலிகிராப் (Daily Telegraph) மற்றும் ஹெரால்ட் சன் (Herald Sun) உள்ளிட்ட சுமார் 70 சதவிகித செய்தி நிறுவனங்களை நியூஸ் கார்ப் கட்டுப்படுத்துகிறது. news.com.au என்ற செய்திதளமும், நியூஸ் கார்ப் நிறுவனத்திற்கு சொந்தமானது.
பேஸ்புக் மற்றும் கூகிள் தளத்தில் உள்ள செய்தி ஊடகங்களின் செய்திகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்த ஊடக நிறுவனங்களில் நியூஸ் கார்ப் நிறுவனமும் ஒன்றாகும்.


















