Editor's Choice

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரை சேர்ந்த முதியவர் ஒருவர் இரண்டு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு, தமது உடல் ஒரு காந்தம் போல ஆகிவிட்டது என்கிறார் அவர். அரவிந்த் சோனார் என்பது அவரது பெயர்.

அரவிந்த் சோனார் ஒரு வீடியோவைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார், அதில் நாணயங்கள் மற்றும் ஸ்டீல் பொருட்கள் அவரது உடலில் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

"நான் என் மகனுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது என் மகன் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் உடலில் இரும்புப் பொருட்கள் ஒட்டிக் கொள்கின்றன என்ற தகவலைச் சொன்னான். அதைச் சோதித்துப் பார்க்க நானும் முயற்சி செய்தேன். அது உண்மை என்று உணர்கிறேன்." என கூறுகிறார் அரவிந்த்.

அவர் 4-5 நாட்களுக்கு முன்பு தான் ஒரு தனியார் மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் போட்டுக்கொண்டுள்ளார். தனக்குப் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என அவர் கூறுகிறார்.

அரவிந்த் சோனார் மார்ச் 9 ஆம் தேதி கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோசையும், ஜூன் 2 ஆம் தேதி இரண்டாவது டோசையும் போட்டுக்கொண்டார்.

அவருக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக நீரிழிவு நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்பூன், தட்டு, நாணயங்கள் போன்றவை அரவிந்த் சோனாரின் உடலில் ஒட்டிக் கொள்வதைக் கண்டு,​​ அவர் அதைப் பற்றித் தனது மருத்துவரிடம் கூறினார்.

"உடலில் நாணயங்கள் மற்றும் பாத்திரங்களை ஒட்டுவது இயற்பியல் விதிகளின்படி சாத்தியமாகும். சருமத்தில் ஈரப்பதம் இருந்தால் மற்றும் ஒட்டும் இடத்தில் ஒரு வெற்றிடக் குழி உருவானால் இது சாத்தியமாகும். ஆனால் இதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு படுத்துவது சரியான விஷயமல்ல.

கொரோனாவை எதிர்ப்பதில், தடுப்பூசி மிகச் சிறந்த ஆயுதம் என்றும் அதனால் இது குறித்த எந்தவொரு பரபரப்பான வதந்தியையும் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர் ஹாமித் கூறுகிறார்.

அர்விந்தின் கூற்றை  மருத்துவர் தத்யாரவே லஹானே நிராகரித்துள்ளார்.

"உலகளவில் கோடிக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கோவிட் தடுப்பூசிக்கும் உடலில் எஃகு மற்றும் இரும்பு பொருட்களை ஒட்டுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதைத் தடுப்பூசியுடன் தொடர்பு படுத்திப் பார்ப்பது தவறு. தடுப்பூசியில் அப்படிப்பட்ட எந்தப் பொருளும் இல்லை" என்கிறார் அவர்.

"இதற்கும் கோவிட் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தடுப்பூசியின் பக்க விளைவாக வலி மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். இது தவிர, இப்படி ஏதாவது நடந்தால், உடனே அதைத் தடுப்பூசியுடன் தொடர்புபடுத்திவிடக்கூடாது. இதுபோன்ற வதந்திகளால்தான் தடுப்பூசி பிரச்சாரம் தொய்வடைய வாய்ப்புள்ளது. இயற்பியலாளர்கள் மற்றும் உலோகவியலாளர்கள் இத்தகைய நபர்களின் உடலில் உலோகப் பொருட்கள் எவ்வாறு ஒட்டிக்கொள்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்." என கூறுகிறார்.

Editor's Choice

தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த மாதம் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது. முதலில் இந்த போட்டியை கொலம்பியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த இருந்தன. அதிபருக்கு எதிராக உள்நாட்டில் போராட்டம் நடந்ததை அடுத்து கொலம்பியா இந்த போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பு எதிெராலியாக அர்ஜென்டினாவும் கடைசி நேரத்தில் பின்வாங்கியது. இதையடுத்து இந்த போட்டி பிரேசிலின் 4 நகரங்களில் உள்ள 5 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ளும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, பொலிவியா, உருகுவே, சிலி, பராகுவே, ‘பி’ பிரிவில் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பெரு ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
 
நடப்பு சாம்பியனான பிரேசில் அணி கடந்த முறை (2019) எந்தவொரு ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்காமல் கோப்பையை உச்சி முகர்ந்தது. அதேபோல் நெய்மார் தலைமையிலான பிரேசில் அணி மீண்டும் கோப்பையை வசப்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது. 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி சமீப காலங்களில் ஜொலிக்காவிட்டாலும் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கேப்டன் லயோனஸ் மெஸ்சி, செர்ஜியோ அகுரோ, ஏஞ்சல் டி மரியா ஆகிய சிறந்த தாக்குதல் ஆட்டக்காரர்கள் போட்டியின் போக்கை அதிரடியாக மாற்றக்கூடியவர்கள். இதேபோல் அதிக முறை (15) சாம்பியனான உருகுவே அணியையும் புறந்தள்ளி விட முடியாது. அந்த அணியில் லூயிஸ் சுவாரஸ், எடிசன் கவானி போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
 
தொடக்க நாளான ஞாயிறு மாலை பிரேசிலியா நகரில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் பிரேசில்-வெனிசுலா அணிகள் மோதுகின்றன. இதனை அடுத்து இரவு குயீபாவில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் கொலம்பியா-ஈகுவடார் அணிகள் சந்திக்கின்றன. இந்திய நேரப்படி மறுநாள் அதாவது நாளை அதிகாலை 2.30 மற்றும் 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிகளை சோனி சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
 
போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.142 கோடியாகும். வாகை சூடும் அணிக்கு ரூ.47 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.25 கோடியும் பரிசாக கிடைக்கும்.
 
வெனிசுலா அணியினருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் வீரர்கள், உதவியாளர்கள் என 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதாக பிரேசில் சுகாதாரத்துறை நேற்று தெரிவித்தது. ஆனால் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக எத்தனை மாற்று வீரர்களை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போட்டி அமைப்பு குழு கூறியுள்ளது. இதனால் இந்த ஆட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிகிறது.
Editor's Choice

ஒரு பெண்ணின் படத்திற்கு முன்னால் ஒரு மனிதன் சுயஇன்பத்தில் ஈடுபடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது."

பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமிர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு காணொளியுடன் பதிவிட்டுள்ளார்.

ஹானியா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினார். அதே நேரலையில், ஒரு ரசிகர் ஹானியாவின் படத்தை வைத்துக் கொண்டு சுயஇன்பம் அடைந்ததைப் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஹானியா, தனது நேரலை காணொளி வழங்கலை நிறுத்தினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, யாரோ ஒருவர் இந்த நேரலையின் காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டார், இது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இந்த காணொளியின் உண்மைத் தன்மையை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. தவிர, சில பயனர்கள் இந்த காணொளி போலியானது என்றும் திரிக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

காலித் என்ற பயனர், "அவமானம் மற்றும் வெட்கம் காரணமாக, யாரும் இதைப் பற்றி பேசவில்லை. சில நாட்களுக்கு முன்பு இதே நபர்கள் மலாலா யூசுப்சாய்க்கு அவர் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்," என எழுதியுள்ளார்.

ஷேக் என்ற பயனர், "நாம் எவ்வளவு செயலற்றுப் போய்விட்டோம்? பாவம் அந்தப் பெண்ணின் சிரிப்பு ஒரு நொடியில் மறைந்தது. அவர் நேரலையை நிறுத்தினார். எனக்கு வார்த்தைகள் வரவில்லை. இப்போது இந்த மக்களின் நல்வழிக்காகப் பிரார்த்தனை செய்யக் கூட எனக்கு மனம் வரவில்லை." என கருத்து தெரிவித்துள்ளார்.

நேரலையில் தனது வக்கிரத்தை வெளிப்படுத்திய அந்த ரசிகனைத் தேடிப் பிடித்து, அவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிலர் கூறுகிறார்கள்.

பல பயனர்கள் சமூக ஊடகக் கேலிகளின் உளவியல் விளைவுகள் பற்றி பேசுவதைப் பார்க்க முடிகிறது. உங்கள் கேலியும் கிண்டலும் ஒருவரின் உயிரைக் கூட எடுக்கக்கூடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள் என சிலர் எச்சரிக்கிறார்கள்.

மலாய்க்கா என்ற பயனர் இது தொடர்பாக ஒரு பதிவுத் தொடரை வெளியிட்டார். அதில் அவர் ஹானியாவிற்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தார், மேலும் அவரை கேலி செய்தவர்கள் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியவர்களைக் கடுமையாக விமர்சித்தார்.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஹானியா தனது ரசிகர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் கொடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

"பிரபலமாக இருப்பதால் நாங்கள் பொதுச் சொத்து என்று அர்த்தமல்ல, ரசிகர்கள் என்ற போர்வையில் ஆண்கள் எங்களைத் துன்புறுத்தலாம் என்றும் அர்த்தமல்ல என நடிகை குறிப்பிட்டிருந்தார். இதுபோன்றவர்களை ரசிகர்கள் என்று எப்படி அழைக்க முடியும்? அவர்கள் எங்களை அன்புக்குப் பதிலாக, பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள், எங்களுக்கு சங்கடம், வலி மற்றும் மன வேதனையை ஏற்படுத்துகிறார்கள்' என அவர் கூறியிருந்தார்.

Editor's Choice

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதையடுத்து சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் வெளியிட்ட முழுமையான ரேங்கிங் அடிப்படையில் மணிப்பூரை சேர்ந்த 26 வயதான மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார். இதனை பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று உறுதி செய்தது. 
 
49 கிலோ பிரிவின் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த மீராபாய் சானு, ஒலிம்பிக் போட்டியில் இருந்து வடகொரியா வீராங்கனைகள் விலகியதை தொடர்ந்து 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார்.
Editor's Choice

சின் ஷே ஹுவாங்-இன் படை வீரர்களின் ஆயிரக்கணக்கான சுடுமண் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டது சீனாவை மட்டுமல்லாது இந்த உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

படை வீரர்களின் சில உருவங்கள் செப்டம்பர் 2007-ல் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை சென்றடைந்தன. அடுத்த ஆறு மாதங்களில் அவற்றைப் பார்க்க சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.

அதற்கு முன்பு 1972ல் எகிப்திய பாரோ மன்னர் டுட்டன்காமுனின் பொக்கிஷங்களை பார்ப்பதற்குத்தான் அங்கு இந்த அளவுக்கு பெரிய கூட்டம் வந்தது.

உட்புறங்களில் செங்கல் கொண்டு உருவாக்கப்பட்ட குழிகளின் நடுவே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்தப் படை வீரர்களின் உருவங்கள் மிகவும் சிறப்பம்சம் வாய்ந்தவை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருந்தது.

ஆனால், மீசை உடைய இந்த முகங்கள் 10 அடிப்படை வடிவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன.

சிவப்பு, நீலம், இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்த இந்த உருவங்கள் தற்போது வண்ணம் குறைந்து, மங்கிக் காணப்படுகின்றன.

காலமும் இயற்கை சீற்றங்களும் இவர்கள் கைவசம் இருந்த உண்மையான ஆயுதங்களை பிடுங்கிக் கொண்டன.

இப்படி பெரும் எண்ணிக்கையில் சுடுமண் உருவங்களும் ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டது ஆரம்பகாலத் திரள் உற்பத்திக்கு (mass production) எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

திறன் வாய்ந்த மன்னராக விளங்கிய சின் ஷே ஹுவாங்-இடம் இதற்கும் குறைவாக நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது.

கிமு 221ஆம் ஆண்டில் சீன நிலப்பரப்பை ஒருங்கிணைத்து அதை மிகப் பெரும் பேரரசாக மாற்றி நிர்வகித்தவர் சின் ஷே ஹுவாங்.

அவ்வளவு பெரிய நிலப்பரப்புக்கும் எழுத்து, பணம், அளவை என அனைத்தையும் ஒரே சீராக உருவாக்கியதுடன் நேரான சாலைகள் மற்றும் கால்வாய்கள் இவரது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டன.

தனது பேரரசின் வடக்கு எல்லையைப் பாதுகாப்பதற்காக சீன பெருஞ்சுவரை கட்டவும் இவர் தொடங்கினார்.

அதிக ஆசைகளை கொண்டிருந்த பேரரசர் சின் ஷே ஹுவாங் சாகாவரம் பெற்ற வாழ்வை வாழ விரும்பினார்.

அதற்கான மந்திர பாணத்தைத் தேடி தமது அமைச்சர் ஒருவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பினார். கடைசிவரை அமைச்சர் ஷு ஃபூ திரும்பவேயில்லை.

இங்குலிகத்தை (mercury sulphide) உட்கொண்டு 10,000 ஆண்டுகள் வாழ்ந்த பழங்கால மன்னர்கள் மற்றும் துறவிகள் பற்றி கேள்விப்பட்டிருந்தார் மன்னர் சின் ஷே ஹுவாங்.

தேன் மற்றும் பாதரசம் கலந்த பழரசங்களை உட்கொண்டு வந்தார். 49வது வயதில் நிகழ்ந்த இவரது மரணம் பாதரசம் உண்டாக்கிய உடல் நலமின்மையால் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

அவரது மரணம் நிகழ்ந்த காலகட்டத்தில் அனைத்தையும் உருவாக்கி வைத்திருந்த பேரரசர் சின் ஷே, அவரது பாதாள கல்லறையை மட்டும் முழுமையாக உருவாக்காமல் வைத்திருந்தார்.

ஒரு வேளை சாகாவரம் கிடைக்காமல் காலம் முழுதும் பேரரசராக வாழ இயலவில்லை என்றால் இறப்புக்குப் பிறகும் ஆட்சி செய்வதற்கான ஏற்பாடாக மண்ணுக்கடியில் இந்த சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கத் தொடங்கியிருந்தார்.

இந்தக் கல்லறைத் தோட்டம் ஒரு பழங்கால நகரத்தின் பரப்பளவுக்கு இருந்தது. இதன் மையத்தில் சுமார் 100 மீட்டர் உயரமுள்ள பிரமிடு உருவாக்கப்பட்டது.

தற்போது இந்த 100 மீட்டர் உயரத்தில் பாதி உயரம் மட்டுமே எஞ்சியுள்ளது. சீனப் பாரம்பரியத்தின்படி ஓர் அனுகூலமான, வளம் மிகுந்த நிலப்பரப்பின் மையமாக இந்தப் பிரமிடு விளங்கும்.

இந்த 8000 படைவீரர்களும் மன்னர் சின் ஷே ஹுவாங்கின் கல்லறைக்கு பின்பு அவரது ரகசியங்களை காப்பதற்காக காவல் நிற்கின்றனர். அந்த ரகசியங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பாதுகாப்பாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஏனென்றால் பேரரசரின் கல்லறை தொடர்ந்து மூடப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் திறக்கப்படவில்லை. உலகெங்கிலுமுள்ள தொல்லியல், அருங்காட்சியக வல்லுனர்களும் அந்த கல்லறையைத் திறப்பது ஒரு பேரழிவாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

அந்தக் கல்லறை திறக்கப்பட்டு, உள்ளே காற்று புகுந்தால் அதற்கு சீர் செய்ய முடியாத அளவுக்கு சேதாரங்கள் உண்டாகும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மண்ணுக்கடியில் இருக்கும் இந்த கல்லறைத் தோட்டத்தை தோண்டி எடுக்கும் முயற்சியின் போது சுடுமண் உருவங்கள் மீது பூசப்பட்டு இருந்த அரக்கு, காற்று பட்ட 15 நொடிகளில் உதிர்ந்து போனதே இதற்குக் காரணம்.

கி.மு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்றாளர் சீமா ஷியானின் கூற்றுப்படி கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள மன்னரின் கல்லறையைச் சுற்றிலும் பாதரசம் அதிக அளவு ஊற்றப்பட்டுள்ளது.

தற்கால வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பை விட அவர் கூறியுள்ள அளவு துல்லியமாக உள்ளது.

அவ்வாறு பாதரசம் அதிகமாக இருக்குமானால் அந்த இடத்திற்கு நுழைவது மிகவும் ஆபத்தானதாக அமைந்துவிடும்.

சமீப ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளும் அந்த இடத்தில் இருக்கும் மண்ணில் மிகவும் அதிகமான அளவில் பாதரசம் இருப்பதை உறுதி செய்கின்றன.

அந்தக் காலகட்டத்தில் இவ்வளவு அதிகமான அளவில் திரவ உலோகமான பாதரசத்தை பேரரசரின் ஆலோசகர்கள் உருவாக்கியிருப்பார்களா என்பது இன்னும் ஓர் அனுமானத்துக்குரிய செய்தியாகவே உள்ளது.

கல்லறைக்கு சேதம் விளைவிக்க கூடாது என்பது மட்டுமல்லாமல் உயிர் ஆபத்தை தவிர்க்க வேண்டும் என்ற இன்னொரு நோக்கமும் அவரது கல்லறை இன்னும் திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது.

கல்லறையின் நுழைவாயிலில் இருந்து பேரரசரின் உடல் இருக்கும் இடத்திற்கு செல்லும் பாதையில் இயந்திர அம்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக சீமா ஷியான் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அம்புகள் இற்றுப் போய்விட்டனவா அல்லது குரோமியம் பூசப்பட்ட நிலையில் இன்னும் நன்றாக இருக்கின்றனவா, மன்னரின் உடலை பார்ப்பதற்காக கல்லறையை திறந்து உள்ளே செல்லும் சாகசத்தை மேற்கொள்பவர்களை வந்து தாக்கக் கூடிய நிலையில் அவை இருக்கின்றனவா என்று எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை சின் ஷே கல்லறை ரகசியங்கள் தொடர்ந்து அச்சுறுத்தும் மர்மமாகவே நீடிக்கும். அவரது கல்லறை அருகே 1970-களில் கண்டெடுக்கப்பட்ட படை வீரர்களின் உருவங்கள் மட்டுமல்லாது படைத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் உருவங்கள், மெய்யான தோற்றத்தின் அளவுக்கு பெரிதான குதிரைகள் மற்றும் தேர்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் பேரரசரின் பணியாளர்கள் பெரும்பாலானோர் ஐரோப்பிய வம்சாவளியினர் என்பது தெரியவந்தது.

இதனால் பண்டைய கிரேக்கர்கள், மனிதர்கள் மற்றும் குதிரைகளின் மிகப்பெரிய உருவங்களை உருவாக்குவதற்கு பழங்கால சீனர்களுக்கு கற்றுக் கொடுத்தார்களா என்ற கேள்வியும் உள்ளது.

சின் ஷே ஹுவாங்-இன் இந்தக் கல்லறை தோட்டம் உருவாக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்த இத்தகைய உருவங்கள் இன்றைய சீன நிலப்பரப்பில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

உலகையே வியப்பில் பெருமூச்சுவிட வைக்கும் அளவுக்கு இருக்கும் இந்த இடம் குறித்த விவரங்கள் இனியும் அதிகமாக வெளிவரும் என்று நாம் காத்திருக்கலாம்.

அதெல்லாம் சரி இத்தகைய பிரும்மாண்டமான தொல்லியல் அதிசயத்தை கண்டறிந்தவர்கள் நிலை என்ன ஆனது?

அந்த வேளாளர்கள் இதை கண்டுபிடித்ததன் மூலம் எதையும் அடையவில்லை. அதற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கை மிகவும் மோசமானது. சுற்றுலா நோக்கில் அவர்களிடமிருந்து அந்த நிலம் அரசால் பிடுங்கப்பட்டது.

இந்தப் தொல்லியல் சின்னங்களைக் கண்டறிந்தவர்கள் ஒருவரான வாங் பூசி வறுமை மற்றும் நோய் காரணமாக 1997ஆம் ஆண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் யாங் ஷிஃபாவின் சகோதரர்கள் யாங் வெங்ஹாய் மற்றும் யாங் யாங்ஷின் ஆகியோர் வேலையும் இல்லாமல் மருத்துவச் செலவுக்கும் பணம் இல்லாமல் அவர்களது ஐம்பதுகளின் தொடக்கத்தில் உயிரிழந்துவிட்டனர்.

இன்னொரு சகோதரரான யான் குவான்-னின் வீடு இடிக்கப்பட்டு விட்டது.

Editor's Choice

தொற்றுநோய் நெருக்கடியினால் வாழ்வாதாரத்தை இழந்து,  வருமானம் இழந்த, மற்றும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி (IDFC FIRST Bank) ‘கார்கர் ரேஷன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்திற்கு வங்கியின் ஊழியர்கள் நிதியளிக்கின்றனர். இது உன்னத முன்முயற்சியைத் தவிர, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி தனது ஊழியர்களுக்காக வேறு சில முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

‘கார்கர் ரேஷன்’ திட்டத்தின் கீழ், ஐ.டி.எஃப்.சி வங்கியின் ஊழியர்கள் தொற்றுநோய் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட 50,000 ரூபாய்க்கு குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கான நிதிக்காக தங்கள் தனிப்பட்ட வருமானத்திலிருந்து, வங்கி ஊழியர்கள் நன்கொடை அளித்துள்ளனர்.

வாடிக்கையாளர் கோவிட் பராமரிப்பு நிதியைப் பொறுத்தவரை, ஐ.டி.எஃப்.சி (IDFC FIRST Bank)  வங்கி ஊழியர்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை, தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல்  தவிக்கும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக நன்கொடையாக அளித்துள்ளனர்.

சாராசரியாக ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான 10 கிலோ அரிசி / கோதுமை மாவு, 2 கிலோ பயறு, 1 கிலோ சர்க்கரை மற்றும் உப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய், 5 பாக்கெட் வகைப்படுத்தப்பட்ட மசாலா பொருட்கள், தேநீர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள், கொரோனா வைரஸ்  நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன.

ரேஷன் பொருட்கள் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்று வழங்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் உள்ள வங்கி ஊழியர்களால் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில் நகர்ப்புற நகரங்களில் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ .1800 மதிப்புள்ள முன் கட்டண அட்டைகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் மளிகை சாமான்களை வாங்க அட்டையைப் பயன்படுத்தலாம்.

பக்கம் 2 / 90