சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்புகள் முதன்முறையாக கண்டறியப்பட்டு வெளியுலகுக்கு தெரிய வந்தன. உகானில் உள்ள விலங்கு உணவு விற்பனை மையமொன்றில் இருந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசானது பரவியது என முதலில் குற்றச்சாட்டு எழுந்தது. எனினும் அதற்கு போதிய சான்றுகள் வெளிவரவில்லை.
சீனாவே கொரோனாவுக்கான உற்பத்தி மையம் ஆக இருந்துள்ளது என அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தது. ஏனெனில், அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை அமெரிக்கா சந்தித்துள்ளது.
சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்றும் அமெரிக்கா குற்றச்சாட்டு கூறியது. இதனால், அந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் கூறி மிரட்டல் விடுத்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் சீனா நாட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், சீனாவில் எந்தவொரு விலங்கினத்தில் இருந்தும் கொரோனா வைரசானது பரவியதற்கான சான்று எதுவும் இல்லை என நிபுணர் குழு தெரிவித்தது.
உலக சுகாதார அமைப்புக்கான திட்ட தலைவர் பீட்டர் பென் எம்பேரக், சீனாவின் உகானில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, ஆய்வகத்தில் இருந்து மனித இனத்திற்கு வைரசானது அறிமுகப்படுத்தப்பட்டது என்பது சாத்தியமில்லை.
நாங்கள் உகானின் வைராலஜி அறிவியல் மையத்தில் ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வகத்தில் இருந்து வைரசானது தப்பி வெளியே செல்வதற்கான சாத்தியம் இல்லை. ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவும் சம்பவங்களும் மிக அரிது என்பது எங்களுக்கு தெரியும் என கூறினார்.
எனினும், உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய புலனாய்வில் சீன அரசின் தலையீட்டிற்கான சாத்தியம் உள்ளது என குற்றச்சாட்டு எழுப்பிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சுல்லிவன், நிபுணர்களின் ஆய்வு முடிவுகளை சாடினார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில், கொரோனா வைரசின் பிறப்பிடம் அமெரிக்காவில் இருந்து தோன்றியதற்கான சான்றுகளை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பிடம் சீனா வலியுறுத்தியது.
இந்த சூழலில், கொரோனா பெருந்தொற்றை உலக நாடுகளிடம் இருந்து மறைக்கும் நோக்கில், தன்னுடைய டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை சீனா உயிர்த்தியாகம் செய்ய வைத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில், கொரோனா பெருந்தொற்றுக்கான அச்சுறுத்தல் தெரிய தொடங்கியதும், அதனை சில வாரங்கள் வரை சீனா மூடி மறைத்துள்ளது. இதுபற்றி ஆன்னி ஸ்பேரோ என்பவர் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டு உள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் பற்றி ஆய்வு செய்து பதிலளிக்கும்படி உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கேட்டு கொண்டது. ஆனால், 24 மணிநேரத்தில் கொரோனா பற்றி உரிய பதிலளிப்பதற்கு பதிலாக, சட்ட மீறலில் ஈடுபட்ட 8 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வதந்திகளை உருவாக்குவோர், நம்புவோர் மற்றும் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம் என உகான் பொது பாதுகாப்பு வாரியம் அறிக்கை அளித்தது.
அதுபற்றி உலக சுகாதார அமைப்பிடம் தெரிவிப்பதற்கு பதிலாக, தகவலை தணிக்கை செய்ய முடிவு செய்ததுடன், மறைக்கவும் செய்தது. சக பணியாளர்களிடம் எச்சரிக்கை விட முயன்ற டாக்டர்களை அமைதிப்படுத்தியது.
சீனாவின் இந்த தவறுகளால், சர்வதேச அளவில் பொது சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு உடனடியாக அறிவிக்காமல் இருக்க செய்து விட்டது.
கொரோனா பெருந்தொற்றை மூடி மறைத்த சீன அரசால் உலக சுகாதார அமைப்பு கொடிய தவறை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 5ந்தேதி, அறியப்படாத நிம்மோனியா என அந்த அமைப்பு உலகிற்கு தகவல் அளித்ததோடு நின்று விட்டது.
எபோலா, ஜிகா மற்றும் எச்.1.என்.1. வைரசுகளை போன்று இதனையும் கவனத்தில் கொள்ளாமல் இருந்து விட்டது.