Editor's Choice

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத இருந்தன. இந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த  சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது.

கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறவிருந்த  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்தது.
 
ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். இதையும் மீறி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது ஏற்பட்டு உள்ளது.
 
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்  அணியைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இவர்களில் வீரர்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. சென்னை அணியின்  தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Editor's Choice

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளை எதிர்த்து போராடி வருகிறது. இந்த தொற்றுநோயிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற, தடுப்பூசி போட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகிறது. ஆனால் இதற்கிடையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியா மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றி மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.

கோவிட் தடுப்பூசி பார்முலாவை பகிர்ந்து கொள்ளும் வகையில், அறிவுசார் சொத்துச் சட்டத்தை மாற்ற முடியுமா என்பது குறித்து பில் கேட்ஸிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பில் கேட்ஸ், 'வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி பார்முலாவை கொடுக்கக்கூடாது. அவர்கள் தடுப்பூசிக்காக காத்திருக்கட்டும் என கூறியுள்ளார். 

பில் கேட்ஸ், "உலகில் பல தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி பாதுகாப்பு குறித்து மிகவும்  தீவிரமாக கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும் தடுப்பு மருந்தின் சூத்திரத்தை கொடுக்கக்கூடாது” என கூறினார். அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பு ஆலைக்கும். இந்தியாவில் உள்ள ஒரு ஆலைக்கும் வித்தியாசம் உள்ளது. நாங்கள் எங்கள் சொந்த பணத்தை முதலீடு செய்து, எங்கள் நிபுணத்துவத்துடன் தடுப்பூசி தயாரிக்கிறோம். தடுப்பூசி சூத்திரத்தை  பகிர்ந்து கொள்வது சரியல்ல . தடுப்பூசி தயாரிக்கும் போது பல விஷயங்களையும் மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டும் என்றார்.

 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,68,147 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. திங்களன்று (மே 3, 2021) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது எனக் கூறலாம்.

Editor's Choice

தடுப்பூசி குறித்து பலருக்கு இன்னும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது?

தடுப்பூசி செயல்முறை தொடங்கிய பின்னர், சிலருக்கு தடுப்பூசியின் சில பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது பற்றி தெரிய வந்தது. இதன் பின்னர், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவற்றின் ஃபேக்ட் ஷீட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை யாரெல்லாம் செலுத்திக்கொள்ளக்கூடாது என்பது பற்றி இதில் கூறப்பட்டுள்ளது. 

தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு மூலப்பொருளுக்கோ, அல்லது பிற வகையான ஒவ்வாமையோ இருந்தால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம் என  கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சினின் ஃபேக்ட் ஷீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் டோஸுக்குப் பிறகு எதிர்வினைகள் வெளிவந்தால் இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப் படியே இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்ள வேண்டும்.  

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, காய்ச்சல் இருந்தாலோ, கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளார்கள். முதல் டோசுக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்குமான இடைவெளியில் காய்ச்சலோ, கொரோனா தொற்றோ ஏற்பட்டாலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே இதை பற்றி முடிவெடுக்க வேண்டும். 

கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம் என கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட்டின் ஃபாக்ட் ஷீட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன்னர், சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணரிடம் உங்கள் உடலின் மருத்துவ நிலை பற்றிய தகவலை அளிக்குமாறு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டின் ஃபாக்ட் ஷீட்டுகள் கேட்டுக்கொண்டுள்ளன. உங்கள் மருத்துவ நிலையை குறிப்பிட்ட பின்னரே தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவை தெரிவிக்கின்றன. 

 

Editor's Choice

கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அதிகபட்சமாக 20 சதவீதம் சூரை மீன் (டுனா) தான். அதே போல் உலகில் விற்பனை செய்யப்படும் மீன், மீன் சார்ந்த உணவுகளில் 8 சதவீதம் இவ்வகை மீன் தான். இந்த மீன் வகையை பாதுகாக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 3ல் உலக சூரை மீன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் வரிச்சூரை, மஞ்சள் துடுப்பு சூரை, பெரிய கண் சூரை என மூன்று வகைகள் உள்ளன. இந்த மீன்கள் ஒரே சீரான தட்பவெப்ப நிலையை விரும்பும். அந்த நீரோட்டத்தை அடையாளம் கண்டு கடல் வழியாக கண்டம் விட்டு கண்டம் செல்லும் இயல்புடையது.

‘டுனா’ மீன்கள் உலகிலேயே மிகச் சுவையானவையாம். பசிபிக் கடலில் அதிகம் கிடைக்கும் இந்த மீனின் ருசிக்கு ஜப்பானியர்கள் அடிமை. அதிலும் ‘ப்ளூஃபின் டுனா’ இன்னும் சுவை அதிகம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ‘ப்ளூஃபின் டுனா’ மீன் ஏலம் விடப்பட்டது. 222 கிலோ எடையுள்ள இந்த மீன் இந்திய மதிப்பில் 9 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட மீன் இதுதான். இதை ஏலத்துக்கு எடுத்தவர்கள் ஒரு சிறிய மீன் துண்டை 1,300 ரூபாய்க்கு விற்றார்கள். ஜப்பானில் டுனா மீன் தொடர்ந்து பிடிக்கப் பட்டதால், தற்போது இந்த மீன் பெருமளவு அழிந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.

Editor's Choice

தேர்தல்கள் பல ஆச்சரியங்களை கொடுக்கும், சில திகைப்பூட்டல்களையும், அதிர்ச்சியையும் தன்னுள்ளே வைத்திருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், எல்லா வியூகங்களையும் உடைத்தெறிந்து அரசியலின் பின்புலத்தில் இருந்து செயல்படும், சாணக்கிய வியூகம் அமைப்பவர் என்று அறியப்படும் ஒருவரின் பதவி விலகும் அறிவிப்பு கலவையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரசாந்த் கிஷோர் என்ற அரசியல் மதியூகியின் நிறுவனம் பணியாற்றிய இரு கட்சிகள் வெற்றியடைந்துள்ளது. பலரின் பார்வையும் அவரை நோக்கி குவியும் நிலையில், இனிமேல் தான் அரசியல் வியூகம் அமைக்கும் பணியில் இருந்து விலகுவதாக  அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுகவிற்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸிற்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக பணியாற்றினார். 

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றுவிட்டது. இந்த திருப்தியுடன் எனது பணியில் இருந்து விலகுகிறேன் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் உத்திகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் ஈடுபட்டிருந்தது.

''மேற்கு வங்கத் தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என்ற மாயதோற்றம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், எல்லாத் தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெற்று விடாது என்று தொடர்ந்து கூறியதே இன்று உண்மையாகி இருக்கிறது”.

பிரதமர் மோடியின் பிரபலம் ஒன்றின் அடிப்படையிலேயே பாரதிய ஜனதா கட்சி எல்லாத தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாது. இதனை உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழகத்திலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனது கணிப்புப்படியே, பாஜக இரட்டை இலக்கத்தைத் தாண்டவில்லை”.

9 ஆண்டுகள் அரசியல் உத்தி ரீதியிலான பணியை திருப்தியுடன் செய்துவிட்டேன். இனிமேல் குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிட விரும்புகிறேன். எனது ஐபேக் நிறுவனத்தில் உள்ள பிற நண்பர்கள் இனி பணிகளை முன்நின்று நடத்துவார்கள்''.

பிரசாந்த் கிஷோரின் இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்ற பலத்த கேள்விகளும், சந்தேகங்களும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Editor's Choice

இந்தியாவில், கொரோனா வைரசின் இரண்டாம் அலை வேகமெடுக்கத் துவங்கி உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், இந்தியாவில் இருந்து வருவோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்காசிய நாடான இஸ்ரேலிலும், அதுபோன்ற ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு, வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 8.38 லட்சத்தை கடந்துள்ளது; பலி எண்ணிக்கை, 6,363 ஆக உள்ளது.

இங்கு, கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் வைத்து, இந்தியாவுக்கு, மக்கள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி, உக்ரைன், பிரேசில், எத்தியோபியா, தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லவும், இஸ்ரேல் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது.

இன்று அமலுக்கு வரும் இந்த தடை, வரும், 16ம் தேதி வரை அமலில் இருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த ஏழு நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு வரும் மக்கள், இரண்டு வார காலத்திற்கு தனிமையில் இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பக்கம் 31 / 90