Editor's Choice

உலக அளவில் திரைப்படத்துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் சிறந்த இயக்குநராக சீனாவின் க்ளோயி சாவ் தேர்வாகியிருக்கிறார். ஆஸ்கரின் 93 வருட வரலாற்றிலேயே பெண் இயக்குநருக்கு இரண்டாவது முறையாக சிறந்த இயக்குநர் விருது கிடைத்திருக்கிறது.

சிறந்த நடிகர் விருது 83 வயதாகும் பழம்பெரும் நடிகர் ஆன்டனி ஹாப்கின்ஸுக்கு "தி ஃபாதர்" என்ற படத்தில் நடித்ததற்காக கிடைத்துள்ளது.

சிறந்த நடிக்கைக்கான விருது ஃபிரான்ட்சிஸ் மெக்டோராமெண்டுக்கு நோமேட்லேண்ட் படத்தில் நடித்ததற்காக கிடைத்திருக்கிறது.

சிறந்த படம் - நோ மேட்லாண்ட்

சிறந்த இயக்குநர் - க்ளோயி சாவ் (நோ மேட்லாண்ட்)

சிறந்த நடிகர் - ஆன்டணி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)

சிறந்த நடிகை - ஃபிரான்ட்சிஸ் மெக்டோர்மென்ட் (நோ மேட்லாண்ட்)

சிறந்த ஆவணப்படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த வெளிநாட்டு படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - சோல்

சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

சிறந்த ஆவண குறும்படம் - கோலெட்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - டூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்)

சிறந்த ஒளிப்பதிவாளர் - எரிக் மெசர்ச்மிட் (மங்க்)

சிறந்த படத்தொகுப்பாளர் - மைக்கேல் நீல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

சிறந்த திரைக்கதை - எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்)

சிறந்த தழுவல் திரைக்கதை - கிறிஸ்டோபர் ஹாம்ப்டன், புளோரியன் செல்லர் (தி பாதர்)

சிறந்த பின்னணி இசை - ட்ரெண்ட் ரெஸ்னர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்)

சிறந்த பாடல் - பைட் ஃபார் யூ, ஜுடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா

சிறந்த துணை நடிகர் - டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)

சிறந்த துணை நடிகை - யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்)

ஆடை வடிவமைப்பு - அன் ரோத் (பிளாக் பாட்டம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)

சிறந்த ஒலி அமைப்பு - நிகோலஸ் பெக்கர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

Editor's Choice

டெல்லி அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் (IPL) போட்டித்  தொடரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அஸ்வின் விளக்கமளித்துள்ளார். தனது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக, இருக்க வேண்டிய நிலை உள்ளதால் தற்காலிகமாக IPL போட்டியில் இருந்து விலகுகிறேன் என்றும் ஆனால், தனது குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து குணமானவுடன் மீண்டும் அணியில் சேர்ந்து கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பதிவு செய்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ்  அணியில் அஸ்வின் தற்காலிகமாக விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவு தான் என்றாலும் மாற்று வீரரை வைத்து டெல்லி அணி சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வின் 10 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்களில்,  77 டெஸ்ட் போட்டிகளிலும், 111 ஒருநாள் மற்றும் 46 T20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவர் 409 டெஸ்ட் விக்கெட்டுகளை வைத்திருக்கிறார். வரலாற்றில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த  16 பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, விராட்கோலிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் நடைபெற்று வரும் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில், 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. போட்டியில் மெதுவாக பந்து வீசியது (slow over rate) தொடர்பாக ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலிக்கு ரூ .12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மெதுவாக பந்து வீசியது தொடர்பான குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் கோஹ்லி நடவடிக்கையை எதிர்கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள லோகன் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 4 x 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகள் நடந்தன.
 
அப்போது பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகள் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று ஓடிய போது பார்வையாளர் பகுதியிலிருந்து உரிமையாளரின் பிடியிலிருந்து தப்பித்து  ஹோலி  என்ற நாய் ஒன்று  பந்தய டிராக்கில் ஓடியது.
 
பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு நடுவே அந்த நாயும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. இதனைக் கண்ட பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
 
எல்லைக் கோட்டுக்கு அருகே வந்த போது மாணவி லானேயை விட ஹோலி  ஒரு வினாடி முந்திச் சென்றது.  அந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
முதல் பரிசு பெற்ற மாணவி லானே கூறும் போது "முதலில், இது மற்றொரு ஓட்டப்பந்தய வீரர் என்று நான் நினைத்தேன், எனக்கு ஆச்சரியமாக இருந்தது, ஏனென்றால் நான் நீண்ட தூரம் முன்னிலையில் இருந்தேன் 
 
"அது நெருங்க நெருங்க, 'இது ஒரு நபராக இருப்பதற்கு சாத்தியம் இல்லை என்றும் அது  மிகச் சிறியது' என்று நினைத்தேன், பின்னர் அது ஒரு நாய் என்பதை நான் கவனித்தேன்,"  நான் அதனை எப்படி முந்தமுடியும் என நினைத்தேன் பின்னர் ஒருவாறாக சமாளித்தேன் என கூறினார்
Editor's Choice

இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக பாதிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.52 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று ஒரேநாளில் 2,812 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். பல மாநிலங்களில் மருந்து பொருட்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆனாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில், ‛இந்தியாவில் மோசமடைந்து வரும் கொரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதியை வழங்குகிறது. மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் இந்தியாவுக்கு 135 கோடி ரூபாய் நிதியை அளிக்கிறது,' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Editor's Choice

நேபாள நாட்டில், உலகிலேயே மிக உயரமான மலைச்சிகரமான, இமயமலையில் உள்ள எவரெஸ்ட் மலைச் சிகரம் அமைந்துள்ளது. இந்த மலைச் சிகரத்தை எட்டி சாதனை படைக்க, உலகெங்கிலும் இருந்து ஏராளமான மலையேறும் வீரர்கள் அங்கு செல்வார்கள். 

கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதை அடுத்து, உலகெங்கிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட,  நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து, உள்நாட்டு விமான போக்குவரத்து என கிட்டத்தட்ட  உலக இயக்கம் ஸ்தபித்தது எனலாம். அந்நிலையில், நேபாள அரசும், எவரெஸ்ட் மலைச்சிகரம் ஏற, அரசு தடை விதித்தது. இதன் காரணமாக அந்த நாட்டின் சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருமானம் பாதிக்கப்பட்டதோடு, சுற்றுலா துறையை சார்ந்திருந்த பல லட்சம் பேர் வேலையிழந்தனர்.

சுற்றுலா துறைக்கு ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர்  மாதம், மலை ஏற்றம் உள்ளிட்ட சாகச பயணங்களை மேற்கொள்ளலாம் என மீண்டும் அனுமதி அளித்ததது.

கொரோனா இரண்டாவது அலை  பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எவரெஸ்ட் சிகர மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நார்வே நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் நெஸ் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மலைமுகட்டில் சிக்கி தவித்த, அந்த மலை ஏற்ற வீரர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு,  காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிக உயரம் கொண்ட மலைச்சிகரத்தில் ஏறும்  ஏற்கனவே, மூச்சி விடுவதில் சிரமம் இருக்கும் நிலையில், நோய் தொற்று ஏற்பட்டால் சுவாசிப்பது மிகவும் கடினம் என்பதால், அவருக்கு உடல் நிலை மோசமாகியுள்ளது.

தற்போது சிகிச்சையில் உள்ள நார்வே நாட்டு மலையேற்ற வீரர், சிகிச்சைக்கு பின் தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Editor's Choice

சர்வதேச அளவிலான ‘உலக பருவநிலை உச்சி மாநாடு’ காணொலி காட்சி மூலமாக  2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்ததன் பேரில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்த மாநாட்டில் பருவநிலை மாறுபாடு காரணமாக உலக நாடுகள் சந்தித்து வரும் சவால்கள் குறித்து அனைவரும் பேசினர். இந்த உச்சி மாநாட்டில் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கு கார்பன் உமிழ்வை குறைக்க நியூசிலாந்தின் வழியை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
 
மேலும் கார்பனை விலை நிர்ணயம் செய்யவும், காலநிலை தொடர்பான நிதி வெளிப்பாடுகளை கட்டாயமாக்கவும், புதைபடிவ எரிபொருள் மானியங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் உலக நாடுகளின் தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜெசிந்தா ஆர்டெர்ன் வலியுறுத்தியுள்ளார்.

பக்கம் 37 / 90