டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட இந்நோய்க்கான அறிகுறிகள் மற்றும் இந்நோயின் நடத்தை எப்படி உண்டாகிறது என்று இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
பொதுவாக, நம் உடலில் உள்ள வேதிப்பொருட்களின் மாற்றங்களால்தான் பலருக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்தால், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். இன்னும் சிலருக்குப் பரம்பரைத் தன்மையில்கூட மனநோய்கள் வருவதுண்டு. ஆனால் இந்நோய் இந்தக் குறைபாடுகளால் வருவதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தக் குறைபாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தாக்கும்போது, இப்படி நடந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் என்று மட்டுமே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அண்மையில் நடந்த ஆராய்ச்சிகளின்படி, அன்பு இல்லாத, பாசத்தைக் கொட்டி சீராட்டி வளர்க்கப்படாத பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இந்நோய்க்கான வேறு அறிகுறிகள்
- பொதுவாக, காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமில்லாதபடி இவர்கள் நடந்துகொள்வார்கள்.
- தங்களுக்குள் எதோ ஒரு குரல் கேட்பதாகவும், அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும் காட்டிக் கொள்வார்கள்.
- ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது தெளிவான ஆதாரம் இல்லாமல் பேசுவார்கள். மடக்கிக் கேட்டால், பேச்சைத் துண்டித்துக் கொள்வார்கள். அடிக்கடி நீண்ட நேரம் மௌனத்தைக் கடைப்பிடிப்பார்கள்.
- ஒரு சிலர் சகஜமாகப் பேசுவார்கள். தாங்கள் படும் துன்பத்தை முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம்கூட ஒளிவுமறைவு இன்றி சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ‘எல்லாரும் தன்னை ஒதுக்குகிறார்கள். புருஷன் தன்னை கொடுமைப்படுத்துகிறான்’ இப்படிப் பேச்சு இருக்கும்.
- இந்நோயால் இன்னும் பாதிக்கப்பட்ட சிலர், பெரிய சந்தேகப் பேர்வழியாக இருப்பார்கள். கணவன் எந்த செயலைச் செய்தாலும் அதை சந்தேகப்பட்டுப் பேசி, சண்டையை வரவழைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆண்களைவிட பெண்கள்தான் இந்தப் பாதிப்புக்கு அதிகம் ஆட்படுகிறார்கள்.
- அதீத கற்பனைப் பேச்சும், நடத்தையும்கூட இந்நோய்க்கு அறிகுறியாகச் சொல்லப்படுகிறது. ‘மீனம்பாக்கம் விமான நிலையம் இருக்கும் இடம் எங்களது. என் கொள்ளுத் தாத்தாதான் அதை தானமாகக் கொடுத்தார்’ என்பார்கள். எதாவது கல்யாண மண்டபத்தில் தரையைச் சுத்தம் செய்யும் வேலையில் இருப்பார்கள். ‘ஜனாதிபதி என் நெருங்கிய உறவினர்தான். ஏதோ என் போறாத காலம் இப்படி இருக்கேன்’ என்று புலம்புவார்கள்.
- இவர்களின் பேச்சில் ஒழுங்கு இருக்கும். கட்டுக்கோப்பு இருக்கும். சில சமயம் நம்பும்படியாகவும் இருக்கும். ஆனால், அது மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவே இருக்கும். இதற்குக் காரணம் எதிராளியைவிட, அவரே கற்பனையை உண்மை என்று நம்புவதன் விளைவுதான்.
- சில மருமகள்கள் தீக்குளிப்பதைச் சொல்கிறார்கள்.
- மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகள் அதிக அளவு ஒருவரிடத்தில் இருந்தால் அவரை டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் என்கிற மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்ற முடிவுக்கு வரலாம் என்கிறார்கள். இது ஒருவகையில் மனச்சிதைவு நோயை ஒட்டியதுதான். என்றாலும் அதற்குண்டான அறிகுறிகளை வைத்து இதுவும் இந்நோய்தான் என்ற முடிவுக்கு வரமுடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
- இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் குணப்படுத்தி விடமுடியும் என்கிறார்கள். மனதளவில் ஆரோக்கிய மாற்றங்கள், உடலளவில் நல்ல உடற்பயிற்சி, அன்பான சுற்றுச்சூழல் இருந்தாலே இதை எளிதில் நிவர்த்தி செய்யமுடியும் என்கிறார்கள்.
வாக்கிங், ஜிம்
வாக்கிங் கட்டாயம் போகவேண்டும். குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் தொடர் வாக்கிங் அவசியம். வேகமாக நடக்கவேண்டுமே தவிர, ஓடக்கூடாது. இது முக்கியம். நடைப்பயிற்சிதான் உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்துவதாக அமையும். ஜிம்முக்குப் போவது ரொம்ப நல்லது.
நல்ல மூடுக்கு வர முயற்சித்தல்
சம்பந்தப்பட்டவரை நல்ல சந்தோஷமான மூடில் இருக்கும்படி செய்யவேண்டும். குடும்பத்தாரின் கனிவான பேச்சு, நண்பர்களின் வாழ்த்துக்கள், உறவினர்களின் பாராட்டுக்கள் அவர் நல்ல மூடுக்கு வர உதவக்கூடிய உத்திகள்.
ஒமேகா_3
இம்மனநிலையில் இருப்பவர்கள் ஒமேகா - 3 கொழுப்புள்ள மீன்களை உணவில் சேர்த்துக்கொண்டால், அதில் உள்ள அமிலம் மூளையில் உள்ள வேதிப்பொருட்களுடன் கலந்து நல்ல மூட் உருவாக உதவும் என்கிறார்கள். இதற்காக நீங்கள் உங்கள் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசிக்க வேண்டும்.
மௌனமாக இருக்கவிடக் கூடாது
இத்தகைய மனநிலை பாதிப்பில் இருப்பவர்கள் அடிக்கடி நீண்ட நேரம் மௌனமாக இருப்பார்கள். உடன் இருப்பவர்கள்தான், அவர்களின் மௌனத்தைக் கலைக்க ஏதாவது செய்யவேண்டும். அவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர், பிடித்த நடிகர், நடிகை, அரசியல் தலைவர்கள் பற்றி அவர்களுடன் விவாதிக்கலாம். அவர்களுக்குச் சாதகமாகப் பேசுவது அவசியம்.
தனியறையில் தூங்கவிடக் கூடாது
இப்படிப்பட்டவர்களை தனியறையில் தூங்கவிடக் கூடாது. நம் அருகில் அம்மாவோ, தோழியோ இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவர்களை உறக்கத்தில் மற்ற சிந்தனைக்கு அழைத்துச் செல்லாது என்கிறார்கள். தூக்கத்தில் எழுந்து நடந்தால், அவர் எங்கே போகிறார் என்றுதான் பார்ப்போமே என்று அவரைப் பின்தொடர்வது போன்ற விபரீத விளையாட்டுக்களில் ஒருபோதும் இறங்கிவிடாதீர்கள்.
யோகா, தியானம்
மனதில்மாற்று எண்ணங்கள் உருவாகாமல் இருக்க முறையான யோகாவும், தியானமும் இவர்களுக்கு உதவும்.
பொழுதுபோக்கு
புதிதாக ஏதாவது பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம். சுற்றுலா. வயலின், வீணை வாசிக்கக் கற்றுக்கொள்ளுதல், இப்படி பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தால் மூளைக்கும் வேலை கொடுத்ததாகும். மனதிற்கும் உற்சாகமாக இருக்கும். வேறு சிந்தனைகளை உருவாகவிடாமல் இவை தடுக்கும்.