Editor's Choice

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீரராக சேலம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் இடம் பெற்றிருந்தார். இவர் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்று, சிறப்பான பந்து வீச்சு மூலமாக இந்திய அணியின் வெற்றிக்குப் பக்கபலமாகத் திகழ்ந்தார்.

சிறிய கிராமத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து, சிறப்பான பந்து வீச்சு மூலமாக உலகளாவிய புகழைப் பெற்ற நடராஜனுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தியா திரும்பினார். பெங்களூருவுக்கு விமானம் மூலம் வந்தடைந்த நடராஜன், சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு கார் மூலம் வந்தடைந்தார்.

சின்னப்பம்பட்டி பிரிவு சாலையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள அவர் வீட்டுக்கு, குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். வழிநெடுகிலும் நடராஜனுக்கு, சாலையின் இருபுறம் பொதுமக்கள் நின்று, மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், செண்டை மேளம் முழங்க நடராஜனை ஊர்வலமாக மக்கள் அழைத்துச் சென்றனர். அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்க அலங்கார மேடைகள் போடப்பட்டிருந்தன.

கரோனா தொற்றுப் பரவல் விதிமுறை அமலில் உள்ளதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் போலீஸாருடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் வீட்டுக்கு வந்து, பாராட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைத் தெரிவித்தனர்.

மேலும், அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ளதால், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினர்.

இதனையடுத்து, கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தேசியக் கொடியைப் போர்த்தி, மாலை அணிவித்து ஊர் மக்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்தனர்.

 

Editor's Choice
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 4- ஆம் நாள் ஆட்டமான இன்று ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது.   ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில்   75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. 
 
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 33 ரன்கள் முன்னிலை பெற்று இருந்ததால்,  4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் 5, தாக்கூர் 4 விக்கெட் வீழ்த்தினர்.
 
இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 4-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில், ரோஹித் சர்மா 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். மழை காரணமாக ஆட்டம் சீக்கிரமாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. 
 
இந்த நிலையில்,  ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் முடிந்து ஓய்வறைக்குத் திரும்பிய முகம்மது சிராஜை பவுண்டரி எல்லைக்கு அருகில் நின்றிருந்த பும்ரா, கட்டியணைத்துப் பாராட்டினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
Editor's Choice

ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரை வென்று, இளம் இந்திய அணி மகத்தான சாதனை படைத்துள்ளது. இந்த நிகழ்வு டுவிட்டரில் பல ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆனது. 

நான்காவது போட்டியில் விளையாடிய பெரும்பாலானவர்கள் இளம் இந்திய வீரர்கள். அவர்களை வைத்து இந்திய அணி, அதுவும் அஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வெற்றி பெற்று இருப்பது வரலாற்று சாதனை என பலரும் புகழ்ந்து வருகின்றனர். விராட் கோஹ்லி, ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. வீரர்கள் அடுத்தடுத்து காயங்களால் வெளியேறினர். இருப்பினும் இந்திய அணி மகத்தான வெற்றியை பதிவு செய்து, வரலாறு படைத்துள்ளது. கப்பட்டது. என்ன ஒரு டீம், என்ன ஒரு டெஸ்ட் தொடர், இந்திய அணி விளையாடிய விதம் நம்ப முடியாதது. ரஹானேவின் சிறந்த தலைமை. அனைத்து இளம் இந்திய வீரர்களும் சிறப்பாக விளையாடினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதன்காரணமாக டுவிட்டரில் #INDvsAUS, #Siraj, #IncredibleIndia, #YoungIndia, #ProudMoment, #BCCI, #brisbanetest, #pujara, #Shubmangill, #TestofChampions, #testmatch, #BleedBlue, #IndiaB, #IndiaIndia என பல ஹேஷ்டாக்குகளில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டாக்குகள் அனைத்தும் டுவிட்டர் இந்தியாவில் டாப் 20-ல் டிரெண்ட் ஆகின.
 

 
Editor's Choice

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் வரும் பிப்.8ம் தேதி முதல் பிப்.21ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் 2ம் அலை அச்சுறுத்தல் உள்ளதால், இப்போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வீரர்கள், வீராங்கனைகள் முன்னதாகவே ஆஸ்திரேலியா வந்து, 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அதன் பின்னர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, அதன் பின்னரே அவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஆஸி. அரசு விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளை வீரர்கள், வீராங்கனைகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று, ஆஸி.ஓபன் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர்கள் 25 பேர் தோஹாவில் இருந்து மெல்போர்னுக்கு நேற்று விமானத்தில் வந்தனர்.

அவர்கள் வந்த விமானத்தில் பயணி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆஸி. ஓபன் நிர்வாகிகள், தங்களது அங்கீகரிக்கப்பட்ட ட்வீட்டர் முகவரியில் பதிவிட்டுள்ளனர். அதில், ‘டென்னிஸ் வீரர்கள் 25 பேர் வந்த விமானத்தில், பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் 25 பேரும் மெல்போர்னில் உள்ள ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் அறைகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். 14 நாட்களும் அவர்கள் பயிற்சிகளில் ஈடுபடவும் அனுமதியில்லை.

விமானத்தில் வந்த 25 வீரர்களின் பெயர், விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. 14 நாட்கள் பயிற்சிகளில் ஈடுபட முடியாது என்பதால், அவர்கள் அனைவரும் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். முறையான பயிற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால், போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Editor's Choice

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369, இந்தியா 336 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 294 ரன்கள் எடுத்தது. பின், 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 4ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்தது. ரோகித் (4), சுப்மன் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில், 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்தார். அபாரமாக ஆடிய சுப்மன் கில் 91 ரன் அடித்தார். கேப்டன் ரகானே 24 ரன்களிலும், நிதானமாக ஆடிய புஜாரா 56 ரன்களும் எடுத்தனர். மறுமுனையில் அசத்திய ரிஷாப் பன்ட் அரைசதம் கடந்தார். மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்தார். லியான் 'சுழலில்' வாஷிங்டன் சுந்தர் 22 ரன்களில் போல்டானார். ஹேசல்வுட் 'வேகத்தில்' ஷர்துல் தாகூர் 2 ரன்களிலேயே வெளியேறினார். ஹேசல்வுட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிஷாப் பன்ட் வெற்றியை உறுதி செய்தார்.
 
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷாப் பன்ட் 89 ரன்களும், நவ்தீப் சைனி அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4, லியான் 2 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பை வென்றது. இம்மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலியா உடனான தொடரை வென்று வரலாற்று சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் 430 புள்ளிகளுடன் முதலிடத்தையும் இந்திய அணி பிடித்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசளிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணிக்கு தலைவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

Editor's Choice

இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ஐபிஎல் 2021 இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் (IPL Auction) பிப்ரவரியில் நடத்தப்படலாம். இதற்காக பி.சி.சி.ஐ (BCCI) பல புதிய விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.  

ஐபிஎல் போட்டி பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள BCCI, ஐபிஎல் 14 வது சீசனுக்கான ஏலத்தில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் தனிப்பட்ட முறையில் சேர விரும்பினால், வாரியம் நேரடியாக மாநில சங்கங்களுடன் பேசும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு வீரரின் முகவர் (agent) அழைக்கப்பட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல் உரிமையாளர்கள், தாங்கள் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. எந்த ஒப்பந்தமும் இல்லாத கிரிக்கெட் வீரர்கள் பிப்ரவரி 4 வரை ஐபிஎல் 2021 பிளேயர் ஒப்பந்தத்துடன் தங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.

ஐபிஎல் 2021 (IPL Auction 2021) க்கான ஏலம் பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வீரரை ஏலத்தில் சேர்க்க விரும்பினால், அவர்கள் அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்த பின்னர் தங்கள் பெயரை அனுப்ப வேண்டும் என்று மாநில சங்கங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் பங்கேற்க விரும்பும் 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கும் பிசிசிஐ சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்தகைய வீரர்கள் அனைவரும் மாநில சங்கங்களில் பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் வீரர் குறைந்தது ஒரு முதல் வகுப்பு (First Class) அல்லது பட்டியல்-ஏ (List-A match) போட்டியில் விளையாடியிருக்க வேண்டும்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் (Cricket) இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் இந்த வாரியம் ஒரு நிபந்தனை விதித்துள்ளது, அதாவது அவர்கள் ஐ.பி.எல்லில் பங்கேற்க விரும்பினால், அவர்கள் மாநில சங்கங்களிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

 

பக்கம் 38 / 49